கோகுல்ராஜ் கொலை வழக்கு.. மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.. தாய் சித்ராவின் கோரிக்கை ஏற்பு
சென்னை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி இருவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்றபோது கோகுல்ராஜ் மாயமானார். இதுகுறித்து திருச்செங்கோடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில்அடுத்த நாள் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே, கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாக கோகுல்ராஜின் தாய் சித்ரா பரபரப்பு புகார் தெரிவித்தார்.
கை தவறி தண்ணீருக்குள் விழுந்த ஐபோன்.. பத்திரமாக மீட்டு தந்த திமிங்கலம்.. வைரலாகும் வீடியோ
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தால் அது நியாயமாக நடக்காது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சித்ரா கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது அப்போது கோகுல்ராஜ் தாயின் கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது
சித்ராவின் கோரிக்கையை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது .மேலும் வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.