6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.. மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி,, முதல்வர் அதிரடி!
சென்னை; கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய நகைக்கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ள முதல்வர், கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து அசத்தி உள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட முழுமையாக இல்லை. அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சியான திமுக கூட்டணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக ஒரே நாளில் அறிவித்தார்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வங்கி சுமார் 12000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக கடந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார். வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
வழக்குகள் வாபஸ்
இதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெறுவதாகவும் அப்போது அறிவித்தார். காவலர்களை தாக்கிய வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்றும் வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகவும் கூறி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
அரசு கல்லூரி கட்டணம்
இதேபோல் சிதம்பரம் ராஜா முத்தைய மருத்துவக்கல்லூரியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணம் வசூலிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன் மூலம் கடலூர், சிதம்பரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி அசத்தினார்.
60 வயது
இந்நிலையில் இந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். . நேற்று சட்டப்பேரவையில விதிஎண் 110ன் கீழ் பேசிய முதல்வர், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் ஆக்கப்படுவார்கள் என்று அறிவித்து மாணவர்களை மகிழ வைத்தார். கையோடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதாக உத்தரவிட்டார்..
மகளிர் லோன் தள்ளுபடி
இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய நகைக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியார் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெறும் பங்காற்றி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான வழியை வகுத்துத் தந்தார். இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறுதொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
முதல்வர் அறிவிப்பு
கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது. நோய்த் தொற்றாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க, நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமருத்துவ உதவிகளையும் அதிமுக அரசு வழங்கியது. இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.