தொடரும் விலை உயர்வு … தங்கம் சவரன் ரூ.25,160க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பெண்கள்
சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் அதிகரித்துள்ளது, பெண்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.அதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை திங்கட்கிழமையன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.
முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஆபரண தங்கம், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை ஏற்றம் இன்றும் தொடர்ந்தது.சென்னையில் 22 கேரட் கொண்ட ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரண தங்கம், 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடரும் விலையேற்றம், பெண்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.