ஜோ பிடனிடம் செல்லும் அமெரிக்க அதிகாரம்.. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு.. என்ன காரணம்?
சென்னை: தங்கத்தின் விலை ரூ 40 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இத்தனை நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இதனால் சாதாரண மக்கள் ஒரு குண்டு மணி தங்கம் வாங்கவே யோசிக்கும் நிலை இருந்தது.
ஆடி போய் ஆவணி மாதம் வந்தவுடன் திருமணங்கள் உள்ளிட்ட சுபவிஷேசங்கள் செய்வர். இந்த நேரத்தில் அவரவர் வசதிக்கேற்ப தங்கத்தை வழங்குவது வழக்கம். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்தனர்.
சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கமல்ஹாசன்!
படிப்படியாக குறையும் தங்கம்
ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் 41 ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 37 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
13 ஆம் தேதி எவ்வளவு
இந்தாண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 40, 672 க்கு விற்பனையானது. ஜனவரி 11-ஆம் தேதி 160 ரூபாய் குறைந்து 40,512 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் 13-ஆம் தேதி சவரனுக்கு 40,368 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆபரணத் தங்கத்தின் விலை
இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40,320 க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் 384 ரூபாய் சரிந்து 39936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது காரணமாக சொல்லப்படுகிறது.
பிட்காயின்
எனினும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கி இருப்பதால் அதன் எதிரொலியாக தங்கத்தின் விலையில் சரிவை சந்திப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். கொரோனாவால் போன பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தங்கத்திற்கு மாற்றாக பலர் பிட்காயின் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
மக்களுக்கு மகிழ்ச்சி
பிட்காயினில் முதலீடு உள்ளிட்டவையால் கூட தங்கத்தின் விலை சரிவை சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனா பொது முடக்கத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்த நிலையில் தங்க நகைகளை மக்கள் வாங்க தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தற்போது அதன் விலை குறைந்து கொண்டே வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.