சென்னையில் தங்கம் விலையில் ஐந்து நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் ஷாக்!
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து சவரன் மீண்டும் ரூ39 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.912 அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.138 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ.39072க்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது
பொருளாதாரம் சரிவு
தங்கம் விலை கடந்த 2019 ஜனவரியில் இருந்ததுடன் ஒப்பிட்டால் வெறும் 22 மாதத்தில் அப்படியே அதன் விலை இருமடங்கு ஆகி உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது
ரூ.43,328க்கு விற்பனை
தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் இந்தியாவில் ஒரு நாளில் விற்கப்பட்ட அதிகப்பட்ச விலை ஆகும்.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் தங்கம் விலை 5 ஆயிரம் வரை குறைந்தது.
எவ்வளவு ஏற்ற இறக்கம்
அதாவது தங்கம் விலை அண்மையில் 38 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது. கடந்த அக்டோபர் 30ம் தேதி ஒரு சவரன் 37872க்கு விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்தது. தங்கம் விலை கடந்த வாரத்தில் ஒரு நாள் கூட குறையவில்லை. குறிப்பாக கடந்த ஐந்து நாளில் கடுமையாக உயர்ந்துள்ளது. 31ம் தேதி ரூ. 38,080க்கும் விற்பனையானது. 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. 2ம் தேதி சவரன் ரூ.38,072, 3ம் தேதி ரூ.38,160, 4ம் தேதி ரூ.38,320க்கும், 5ம் தேதி ரூ.38,480க்கும் விற்கப்பட்டது.
சென்னை தங்கம் விலை
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.57 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,867க்கும், சவரனுக்கு ரூ.456 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,936க்கும் சென்னையில் விற்பனையானது. இந்நிலையில் நேற்று சென்னையில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,884க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,072க்கும் விற்பனையானது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.912 அளவுக்கு அதிகரித்தது. தீபாவளி நெருங்கும் சூழலில் தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
கடும் விலை உயர்வு
இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்னிதம் 69 ஆயிரத்து 700 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி, நேற்று 500 ரூபாய் உயர்ந்து 70000 ஆக உள்ளது.