ஜம்முன்னு குறைந்த தங்கம் விலை.. மக்கள் செம ஹேப்பி.. நகைக் கடைகள் சூப்பர் பிசி!
சென்னை: ஐப்பசி பிறந்து முகூர்த்தங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிய நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தங்கம் விலை 1,464 வரை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை நேற்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1464 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.37,440 ஆக குறைந்துள்ளது.. முன்னதாக நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.264 அதிகரித்து ரூ.38904க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தின் விலையில் அண்மைக்காலமாக நிலையற்ற தன்மையே நீடிக்கிறது. எனினும் வரலாறு காணாத அளவுக்கு நகை விலை சரிவால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர். நேற்றைய விலை தான் இன்றும் விற்கப்படும் என்பதால் நகைகடைக்கு மக்கள் ஆர்வமுடன் செல்கிறார்கள்.
தங்கம் விலை ஏற்றம் ஏன்
பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்துள்ளது. ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது
ரூ.43,328க்கு விற்பனை
தங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனை செய்யப்பபட்டது. அதன் பிறகு தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
எவ்வளவு ஏற்ற இறக்கம்
கடந்த 15ம் தேதி ஒரு கிராம் தங்கம் 4,830க்கும், சவரன் 38,640க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்பிறகு மாலையிலும் உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு ₹33 அதிகரித்து ஒரு கிராம் 4,863க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38904க்கு விற்பனையானது.
சென்னை தங்கம் விலை
இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தங்கம் விலை மிகப்பெரிய சரிவினை சந்தித்தது. கிராமுக்கு 183 குறைந்து ஒரு கிராம் 4,680க்கும், சவரனுக்கு ரூ. 1464 குறைந்து ஒரு சவரன் 37,440க்கும் விற்கப்பனையானது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஐப்பசி பிறந்த முதல் முகூர்த்தமே இன்று தான் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் ஒரு சவரன் விலை 38 ஆயிரத்திற்கு கீழ் நேற்று குறைந்து நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழத்தியது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு தங்கம் விலை முதல்முறையாக சவரனுக்கு 38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
இன்று வெள்ளி விலை
இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கடந்த 16ம் தேதி கிலோவுக்கு 1500 அதிகரிதது 65800க்கு விற்பனையானது. ஆனால் நேற்று கிலோவுக்கு 400 ரூபாய் சரிந்து 65400க்கு விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது. நேற்றைய விலை தான் இன்றும் இருக்கும். தங்கம் விலையும் நேற்றைய விலையில் தான் விற்கப்படும் என்பதால் நகை வாங்குவோர் ஆர்வமுடன் நகை கடைகளில் குவிகிறார்கள்.
அருமையான வாய்ப்பு
அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்புகள் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் பொருளாதார கொள்கையில் பெருமளவு மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால் தான் உலகச்சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் விலை சரிந்தது. தங்கம் விலை 5 ஆயிரம் வரை இரு மாதத்தில் குறைந்துள்ள நிலையில் இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.