பெரும் அதிர்ச்சி.. ஒரு சவரன் தங்கம் ரூ.31,000த்தை தாண்டியது.. மூன்றே நாளில் சவரனுக்கு ரூ.1280 உயர்வு
சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும், தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் உயர்ந்துள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது. இதன்மூலம், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.31,168க்கு விற்பனையாகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக 72 டாலருக்கு மேல் சரிந்தது, போன்றவை தங்கத்தின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியா தனது தங்கத்தின் தேவைகளில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது. எனவே, ரூபாய் விலை வீழ்ச்சி, தங்கத்தின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதட்டம் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என பல நாடுகளும் கருதுகின்றன. எனவே, தங்கத்தின் விலை அடுத்தடுத்து நாட்களில் இன்னும் அதிகரிக்க கூடும்.
உலகளாவிய சந்தைகளில், தங்கத்தின் விலை இன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 1.5% உயர்ந்து 1,579.55 டாலராக உள்ளது, இது ஆறு ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவு.
ஈராக்கில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட தளபதி கஸ்ஸெம் சோலைமணி கொல்லப்பட்டார். எனவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.