ஒரே நாளில் நடந்த சூப்பர் மாற்றங்கள்.. தங்கம் விலை அமோக சரிவு.. ரூபாய் மதிப்பு, பங்குச் சந்தை ஏற்றம்!
Recommended Video
சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில், ரூ.664 குறைந்துள்ளது. சென்னையில், இன்று மாலை, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.29,264க்கு விற்பனையானது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து சவரன் ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை முதல் குறையத் தொடங்கியது. மாலையில் மேலும் குறைந்தது.
இல்லத்தரசிகள்
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சென்னையில் ரூ.664 குறைந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.29,264க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 83 ரூபாய் குறைந்து 3658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு
தங்கம் விலை குறைய காரணம்
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்தது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது என்று வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
ரூபாய் ஏற்றம்
செப்டம்பர் 5 ம் தேதி, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 28 பைசா ஏற்றம் கண்டு 71.84 ஆக உயர்ந்தது. சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக கூறியதை அடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது. எனவேதான், ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது. இன்று இந்திய ரூபாய் மதிப்பு மேலும், 12 பைசா உயர்ந்து டாலருக்கு எதிராக 71.72 என்ற அளவில் இருந்தது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 338 புள்ளிகள் உயர்ந்து 36,981 புள்ளிகளாகவும், நிஃப்டி 10,950 புள்ளிகளுக்கு மேலாகவும் இருந்தது. மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் பங்குகள் 5% வரை உயர்ந்தன. சன் பார்மா, யெஸ் வங்கி பங்குகள் 2% வரை சரிந்தன. ஜியோ கிகா ஃபைபரின் வணிக ரீதியான வெற்றிக்கு பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2% உயர்ந்துள்ளன. இத்தனைக்கும் நடுவே மற்றொரு நல்ல செய்தி, இன்றுதான் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குகிறது.