தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி.. திமுக அறிவிப்பு
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக திமுக அறிவித்துள்ளது. வெள்ளி வென்ற ஆரோகியராஜுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியா சார்பில் தங்கம் வென்றார். இந்த போட்டித் தொடரில், ஆரோக்கிய ராஜ் வெள்ளிப் பரிசு வென்றார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
தங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான நிலையத்தில் வரவேற்க ஆளில்லை
தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய கோமதி மாரிமுத்து, தமிழக முதல்வர் தனக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.