சென்னையில் கொரோனாவிலிருந்து 68% பேர் மீண்டாச்சு.. ஏரியாக்களில் அதிகரிக்கும் மந்தை எதிர்ப்பு சக்தி
சென்னை: சென்னையில், கொரோனா பாதித்தவர்களில் 68 சதவீதத்திற்கும் மேல் குணமடைந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியில், ஏப்ரல் முதல் வாரம் முதல்தான், பரவலாக கொரோனா தொற்று கண்டறியப்படுகின்றது. தற்போது சென்னையில் சுமார் முக்கால் லட்சம் பேர், அதாவது சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 73728 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி, 78,161 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சுமார் 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட காலத்தில் ரயில்வே வளாகங்களில் மரணித்த 110 இடம்பெயர் தொழிலாளர்கள்
டிஸ்சார்ஜ் விகிதம்
இது சுமார் 68 சதவீதமாகும். இன்னும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அதேநேரம், டிஸ்சார்ஜ் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து, சென்னை மாநகராட்சி வேகமாக மீண்டு வருகிறது.
சென்னை குணமடையும் விகிதம்
அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேகமாக குணமடைந்துள்ளனர். திருவொற்றியூரில், 2,845 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதில், 1,801 பேர் குணமடைந்துள்ளனர். 63 சதவீத டிஸ்சார்ஜ் விகிதம் இதுவாகும். இந்த மண்டலத்தில் உயிரிழப்பு, 65 என்ற அளவுக்கு இருந்தது.
ராயபுரத்தில் அசத்தல்
மணலியில், குணமடைந்தோர் விகிதம் 66 என்பதாக உள்ளது. உயிரிழப்பு, 15 ஆக உள்ளது. ராயபுரத்தில் தொற்று முன்பு அதிகம் பதிவானது. மொத்தம் 9,242 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 7,340 பேர் குணமடைந்தனர். குணமடையும் விகிதம் 79 சதவீதம் எந்ற அளவுக்கு உள்ளது. எனவே சென்னை மாநகராட்சியிலேயே மீட்பு விகிதம் அதிகம் உள்ள இடமாகவும் ராயபுரம் மாறி சாதித்துக் காட்டியுள்ளது. ராயபுரம் மண்டல்ததில், கொரோனா உயிரிழப்பு, 161 என்ற அளவில் இருந்தது.
தண்டையார்பேட்டை, அண்ணாநகர்
வட சென்னையின், ராயபுரத்துக்கு அருகாமையிலுள்ள, தண்டையார்பேட்டையில், தொற்று பாதித்தது 7,903 பேருக்கு. அதில், மீட்பு விகிதம் 77 என்ற அளவுக்கு உள்ளது. இந்த மண்டலத்தில் 166 பேர் இறந்துள்ளனர். தேனாம்பேட்டையில், 72 சதவீதமாக மீட்பு உள்ளது. வளசரவாக்கம், சோழிங்கநல்லுாரில் தலா 69 சதவீத மீட்பு உள்ளது. அண்ணாநகர், திரு.வி.க.நகர், அடையாறில் 68 சதவீதமாக உள்ளது மீட்பு விகிதம்.
ஆலந்துாரில், 58 சதவீதமும், பெருங்குடியில், 57 சதவீதம் பேரும் நோய் பாதித்து குணமடைந்துள்ளனர். இந்த மண்டலங்களில் அதிக சிகிச்சை வசதி தேவைப்படுகிறது.
தெருக்களில் மந்தை எதிர்ப்பு சக்தி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மந்தை எதிர்ப்பு சக்தி சென்னைவாசிகளுக்கு அதிகரிக்க தொடங்கும் என்பதுதான். 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய் பாதித்து குணமடைந்தால், மந்தை எதிர்ப்பு சக்தி ஏற்படும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து. ஆனால் 1 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சம் பேருக்காவது கொரோனா பாதித்தால்தான் இந்த கணிப்பு செல்லுபடியாகும். ஆனால், இப்போது அதிகம் பாதித்த மண்டலங்களில் குறிப்பிட்ட தெருக்களில் இனிமேல் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு குறைவு. ராயபுரத்தில் மீட்பு விகிதம் அதிகரிப்பதும், புதிய நோய் எண்ணிக்கை குறைவதும் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் பிற ஏரியா மக்கள், அந்த பகுதிக்கு செல்வதோ, அந்த மக்கள் பிற பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் செல்வதோதான் நோயை பரப்பும். மற்றபடி அந்தந்த தெருக்களில் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதே இந்த மீட்பு விகிதம் சொல்லும் பாடம்.