அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம்.. கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் பதிவேற்றம்.. என்ன நடந்தது?
சென்னை: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் ஐஓஎஸ் பயனாளிகள், ஆப்பிள் ப்ளே ஸ்டோர் மூலம் பேடிஎம் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற தடையை விதிக்கவில்லை.
பேடிஎம் செயலி, பண பரிமாற்றம் செய்வதற்கு எளிதான வழியாக பார்க்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, தள்ளுவண்டி கடைக்காரர்கள் வரை பேடிஎம் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடியும்.
பேண்டஸி சூதாட்டம்
ஆனால் பேடிஎம் செயலை சமீபத்தில் கிரிக்கெட் பேண்டஸி என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுடன் ஆப் அறிமுகம் செய்தது. இப்படி விளையாடும்போது, பணமும் வெல்ல முடியும் என்ற வாய்ப்பை பேடிஎம் வழங்கியது. இதுபோன்ற சூதாட்டத்திற்கு பிளே ஸ்டோரில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது கூகுள். இதையடுத்து பேடிஎம்மை, ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.
உறுதி செய்த பேடிஎம்
இதை பேடிஎம் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் பிளே ஸ்டோரில் தங்களது செயலி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது. அதேநேரம் பேடிஎம் மணி, பேடிஎம் ஃபார் பிசினஸ், பேடிஎம் இன்சைடர் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் இதர ஆப்கள், ப்ளே ஸ்டோரில் தொடர்ந்து கிடைக்கும்.
எச்சரிக்கை
பலமுறை பேடிஎம் நிறுவனத்திற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகுதான், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பேடிஎம் செயலி மீண்டும் கூகுளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின் இந்த செயலி மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த செயலியை எப்போதும் பதிவிறக்கம் செய்யலாம் என்று பேடிஎம் தெரிவித்துள்ளது .
சச்சின் டெண்டுல்கர்
முன்னதாக, இந்த பேன்டஸிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சீனாவை சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தூதராக சச்சின் செயல்படுவதா என்று வர்த்தக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில்தான் இப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த செயலி நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ளது.
பேடிஎம் உறுதி
இதனிடையே, பயனாளர்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதாக பேடிஎம் கூறியுள்ளது. இதுபற்றி டுவிட்டரில் பேடிஎம் கூறுகையில், "உங்கள் பணம் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. Paytm ஆப்பை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் சூதாட்ட இணையதளம் பணப் பரிமாற்றத்திற்கு பேடிஎம்மை பயன்படுத்தினால் அதையும் அனுமதிக்க மாட்டோம்" என்று பேடிஎம் உறுதியளித்துள்ளது.