இரும்பு ஸ்கேலால் பலமுறை அடித்த டீச்சர்.. மூளையில் ரத்தகசிவு.. பார்வை பறிபோன பரிதாப மாணவன் கார்த்திக்
ஆசிரியை அடித்ததில் மாணவனுக்கு பார்வை பறிபோயுள்ளது
சென்னை: இரும்பு ஸ்கேலால் கார்த்திகை பலமுறை அடித்திருக்கிறார் டீச்சர் உமா.. இதனால் மாணவனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு.. பார்வையும் பறிபோயுள்ள கொடுமை நடந்துள்ளது!
சென்னை பள்ளிகரணையை சேர்ந்த தம்பதி வேலு-ரேகா. அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார் வேலு... இவர்களுக்கு 3 பிள்ளைகள்.
இதில் முதல் மகன்தான் கார்த்திக்.. 14 வயதாகிறது.. மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் கிளாஸ் ரூமில் இருந்தபோது, தமிழ் ஆசிரியர் ஆசிரியை உமா இரும்பு ஸ்கேலால் கார்த்திகை பலமுறை அடித்ததாக கூறப்படுகிறது.
தலையில் காயம்
இதில் கார்த்திக்கின் தலையில் காயம் ஏற்பட்டது.. பிறகு சில நாட்களிலேயே கண் பார்வை கோளாறு ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர், கார்த்திக்கை கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போதுதான் மாணவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அது மட்டுமல்ல.. இதனால் கார்த்திக்கின் கண் கொஞ்சம் வெளியே வந்துவிட்டது.. இது பெற்றோருக்கு தலையில் இடி விழுந்தமாதிரி ஆயிற்று.
கண் பார்வை
பிறகு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.. அதன்படியே ஆபரேஷனும் கார்த்திக்கு நடந்தது.. ஆனால், எதிர்பாராத விதமாக கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோயுள்ளது... அது மட்டுமல்ல.. நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டுள்ளது.. அன்று இரும்பு ஸ்கேலால் அடித்ததில் இருந்து இப்போது வரை மூளையில் ரத்தக்கசிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறதாம்!
பார்வை
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வளவு நடந்தும் பள்ளி நிர்வாகத்தில் இருந்து யாருமே வந்து மாணவனை பார்க்கவில்லை என்கிறார்கள் பெற்றோர்.. போலீசில் இதைபற்றி சொல்லியும் இன்னும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
டீச்சர் உமா
மகனை அடித்த டீச்சரை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் கதறி கேட்டுக் கொண்டுள்ளனர். மாணவனை ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகமும் வெளிப்படையான விளக்கத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.. ஆனால், மேடவாக்கம் அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினார் என்ற தகவல்கள் மட்டும் கசிந்தன. இரும்பு ஸ்கேலால் அடித்தே, ஒரு மாணவனுக்கு கண் போன சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.