ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் கட்டணம் குறைச்சாச்சு.. பயணிகள் ஹேப்பி!
அரசு ஏ.சி. பேருந்துகளில் 10 சதவீதம் கட்டணம் நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசு ஏ.சி. பேருந்துகளில் 10 சதவீதம் கட்டணம் நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் படுக்கை வசதி கொண்ட புதிய ஏ.சி. பேருந்து சேவை தொடங்கப்பட்டது. 34 ஏ.சி. படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏ.சி. இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
நெல்லை, திருச்சி, மதுரை, போடி, எர்ணாக்குளம், பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இந்த ஏ.சி. படுக்கை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக இந்த ஏ.சி. பேருந்து சேவை கொண்டுவரப்பட்டது.
ஆனால், சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏ.சி. பேருந்துகளில் 15 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக இருந்தது.
இதனால், அரசு ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே போல், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏ.சி. இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
அரசு ஏ.சி. பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதற்கு பயணிகள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். கட்டண குறைப்பை தொடர்ந்து இனி பயணிகளின் வருகை அதிகரிக்ககூடும் என எதிர்ப்பார்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.