ஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை?... நீதிபதிகள் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தங்களது சாதியை வெளிப்படுத்தி கொள்ள பள்ளி குழந்தைகள் கைகளில் கூட அடையாள கயிறுகள் கட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.
அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் செலுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.
சாதியை அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், ஆணவக் கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 22ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரம் காலஅவகாசம் கேட்டனர். ஆனால், நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய விவகாரங்களில் அரசு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.