ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 1,248 பள்ளிகளை மூடி விட்டு அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 1,248 பள்ளிகளை அரசு மூட உள்ளதாக வெளியான தகவல் தவறு என்றார். தமிழகத்தை பொருத்தவரை 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார். அந்த பள்ளிகளை மட்டுமே தற்காலிக நூலகங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த 45 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும், இதனால் ஈராசிரியர் பள்ளிகள் 4 ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்படும் என்றார்.
நூலகங்களாக மாற்றப்படும் பள்ளிகளில் மீண்டும் 6 மாதங்களுக்கு பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் மீண்டும் சேரும்போது பள்ளிகள் செயல்படும் என்றார் எனவே எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசுகையில் அந்நிய முதலீடுகளை ஈட்டி விரைவில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏராளமான தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளது.
இதுவரை தமிழக அரசு சார்பில் 54 லட்சத்து 36 ஆயிரம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.