தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: தலைநகர் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
புதிய கல்குவாரிகள் மூலம் கூடுதலாக தண்ணீர் எடுத்து வர, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் மாநகராட்சி மைதானத்தில், இன்று உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற , அமைச்சர் மா ஃபா பாண்டியராஜன் யோகா செய்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மருத்துவத்துறையை பொருத்த வரையில், தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை மையம்
மேலும் தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய அம்சமாக யோகா உள்ளதாக கூறிய அவர், பள்ளிகளிலும் யோகா அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அமைச்சர் தமிழக மக்களின் ஒரு அங்கமாக யோகாவை கொண்டுவர தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழை இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தலைநகர் சென்னையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இன்னும் பல திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளது. அடையாளம் காணப்படாத பல இடங்களில் இருந்து, குறிப்பாக புதிய கல்குவாரிகள் மூலம் கூடுதலாக தண்ணீரை எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு ஏரிகளை குடிநீர் ஏரியாக மாற்றும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அயனம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரிகளில் முறையே ரூ.32 கோடி மற்றும் ரூ.30 கோடி செலவில் குடிநீராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சென்னை மக்களின் தாகத்தை ஓரளவுக்காவது தணிக்க முயன்று வருகிறோம். இதற்காக நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறினார்.
அதிமுக அரசு தான் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தது என்றும், தற்போது இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.