கக்கன், நல்லகண்ணு குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் அரசு வீடு.. துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
சென்னை: கக்கன், நல்லகண்ணு குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் அரசு வீடு அவர்கள் விரும்பும் இடத்தில் ஒதுக்கப்படும் என பேரவையில் பேசிய துணைமுதல்வர் பன்னீர்லெ்வம் அறிவித்துள்ளார்.
வாடகை ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பிற்கான சட்டத்திருத்த மசோதாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். இதில் வாடகை ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளரும் வாடகைதாரரும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கக்கன், நல்லகண்ணு குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்றும் பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். இதனிடையே பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார் முதல்வர் பழனிசாமி.
விழுப்புரம் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும், மலர்கள் விற்பனைக்காக சர்வதேச ஏல மையம் ஓசூரில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ரூ.3,115 கோடியில் ஏற்படுத்தப்படும். 29 நகரங்களில் மறு நிலஅளவை பணிகள் ரூ.3,029 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்
பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும். விழுப்புரம் இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.