காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை
சென்னை: காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் பெயரை சூட்டலாம் என, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி, இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது.
மற்றொன்று திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் மூன்றாண்டு சட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
அப்போது தமிழக சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் அரசின் ஒப்புதலுடன் இந்த ஆங்கில பயிற்சி வகுப்பு விரைவில் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் துவக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டப்பட்டிருந்தது.
பட்டரைப் பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிகளில் தடையற்ற செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை கிடைக்க பிஎஸ்என்எல் சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தமிழ் நாளிதழ்களுடன், ஆங்கில நாளிதழ்களும், தொலைக்காட்சி வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
விசாரணையின் போது இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், மாணவர்களின் பாதுகாப்பிற்காக சட்டக்கல்லூரி உள்ள பகுதியில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த உத்தரவிட்டனர். மேலும் உடற்கல்வி இயக்குநர்களை நியமித்து படிப்புடன் விளையாட்டையும் ஊக்குவித்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும்
தவிர மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள் இரு சட்ட கல்லூரிகளும் ஒரே பெயரில் செயல்படுவதால் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது.
இதனால் இரு கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் பெயர் வைக்கலாம் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பின்னர் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.