பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்
தொழிற்சங்கங்களை இழிவுப்படுத்தி தன்னிச்சையாக எடுக்கும் முடிவை ஏற்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இடைக்கால நிவாரணம் என்பது முழு தீர்வல்ல தொமுச பொருளாளர் நடராசன் கூறியுள்ளார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் போராட்டத்தில் தீவிரப்படுத்தப்படும் என தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களை இழிவுப்படுத்தி தன்னிச்சையாக எடுக்கும் முடிவை ஏற்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்று ஒன் இண்டியா தமிழ் செய்திகளுக்கு நடராஜன் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த போராட்டம் எதற்கு? எப்போது முடிவுக்கு வரும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் தொமுச பொருளாளர் நடராஜன்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து வேலை நிறுத்த அறிவிப்பை கொடுத்துள்ளோம். தொழிலாளர்துறையில் ஏற்பட்ட அறிவுருத்தலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை 5.1.2021ல் நடைப்பெற்றது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர் கலந்து கொள்ளவில்லை என்ற பிரச்சினை எழுந்த நிலையில், எங்களது வலியுறுத்தலின் அடிப்படையில் 18.2.2021ல் போக்குவரத்து துறை அமைச்சரின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
கோரிக்கைகளை கொடுத்து 18 மாதங்கள் கடந்துவிட்டது. அதற்கான பதில்கள் சரியாக வரவில்லை என்ற நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதியை கேட்டபோது, தேதியை குறிப்பிட்டாமல் கூட்டத்தை அமைச்சர் முடித்துவிட்டார்.
23ம் தேதி கூட்டமைப்பு சங்கங்கள் கூடி வேலை நிறுத்தத்திற்கான தேதியை அறிவிப்போம் என தெரிவித்தோம். 23 ம் தேதி வரை எந்த பதிலும் வரவில்லை என்ற நிலையில் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்தோம். இந்த முடிவையும் 30 மணி நேரம், அரசிற்கு அவகாசம் கொடுத்தே எடுத்தோம். ஆனால், அரசு மோசமான மனநிலையில் கையாண்டு 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக தன்னிச்சையாக எடுத்துள்ளது நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
தொழிற்சங்கங்களை இழிவுப்படுத்தி தன்னிச்சையாக எடுக்கும் முடிவை ஏற்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இடைக்கால நிவாரணம் என்பது முழு தீர்வல்ல.
மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு.. 'கன்ஸிடர்' பட்டியலில் இடம்பெறுமா தேமுதிக?
இடைக்கால நிவாரணம் பொருந்தும் என்று சொன்னால், 18 மாத நிலுவைத்தொகை இருக்க வேண்டும். நிலுவைத் தொகை இல்லை என்றால் இன்று முதல் ஒப்பந்தம் என்று மாறிவிடும். ஒப்பந்தம் எப்போது? என்பதும், ஓய்வு பெற்ற பணியாளர்களின் அகவிலைப்படி அவர்களுக்கான நிலுவைத்தொகை, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்துபவை, போக்குவரத்துக்கான வரவுக்கும், செலவுக்கான வித்தியாச தொகை போன்ற பல்வேறு பிரச்சனைகள் அத்தியாவசியமாக உள்ளது.
இவ்வாறான பிரச்சனைகளை சந்தித்து பேசுவதற்கான மறுப்பு தெரிவிக்கும் போக்குவரத்துறை அமைச்சரின் செயலை கண்டிப்பதோடு தொழிலாளர்கள் எங்களது அழைப்பை ஏற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்டோ, டாக்ஸி ஓட்டுபவர்களை அழைத்து பேருந்தை இயக்க முயற்சி செய்கின்றனர். இது பயணிகளின் உயிரோடு விளையாடுகின்ற விஷயம். அவ்வாறு மோசமான செயல்களை அரசு ஈடுபடும் என்றால், நாங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில தொழிற்சங்க அமைப்புகள் களத்தில் இறங்கும் சூழலலை அரசு ஏற்படுத்த வேண்டாம்.
எங்களது வற்புறுத்தலை நல்ல விதமாக ஏற்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சனைக்களை சுமுகமாக தீர்த்து பேருந்தை இயக்கி பயணிகளுக்கும், பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம்.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரில் 12, 13 ஆயிரம் பேர் தவிர்த்து மற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 95சதவிகித போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். 18 மாதமாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு செவி சாய்க்கவில்லை. பொதுமக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது எங்கள் நியாயங்களை உணர்ந்து இந்த சங்கடங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
50 சதவிகித பேருந்துகள் ஓடுகின்றன என அரசு செல்கிறது. தனியார் கல்லூரிகளிலிருந்து ஆட்களை கூட்டி பேருந்துகளை இயக்க வைத்தால், எங்கள் பேருந்துகளை எங்களை விட யாராலும் இயக்க இயலாது. எங்களுக்கு பழக்கப்பட்ட குதிரையில் எங்களால் மட்டுமே சவாரி செய்ய முடியும். இது பயணிகளில் உயிர் சம்மந்தப்பட்டது என்பதால் அரசு கவனமாக கையாள வேண்டும்.
9 சங்கள்கள் இணைந்த கூட்டமைப்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சங்கங்கள் தாண்டி ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களும் கோரிக்கையை வைக்கின்றனர் என்றும் நடராசன் தெரிவித்துள்ளார்.