"திருக்கோவில்.." தமிழக அரசின் புதிய டிவி சேனல்.. கோயில்களின் முக்கிய விழாக்கள் 4K தரத்தில் ஒளிபரப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் பிரசித்தி நிகழ்வுகளை ஒளிபரப்ப "திருக்கோவில்" பெயரில் புதிய தொலைக்காட்சியை தொடங்குகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களை ஒளிபரப்ப, 'திருக்கோவில் தொலைக்காட்சி' என்று சேனல் துவங்கப்படுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது சிறப்பான வீடியோ ஒளிப்பதிவுகளை கீழ்காணும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் - தமிழக அரசு
துல்லியம் தேவை
திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்திட அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு திருக்கோவில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் 4K துல்லியம் கொண்ட கேமரா கொண்ட வீடியோ கேமராக்கள் மூலமாக ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கோபுரங்கள்
திருக்கோவில் வளாகம், முகப்பு, விமானங்கள், கோபுரங்கள், திருக்கோவிலுக்கான பெயர் தெரியும் வகையில், தொடக்க பதிவுகள் இடம்பெறவேண்டும். திருக்கோயில் அமைவிடம், விவரங்கள் தெளிவாக இடம்பெறவேண்டும். திருக்கோயில் தல வரலாறு (பின்னணி வர்ணனையுடன்) இருத்தல் அவசியம்.
திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் (பின்னணிகள் சம்பந்தப்பட்ட திருக்கோவிலில் தொடர்பான பாடல்கள், இசையுடன்) திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நிகழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும் (30 வினாடிகள்).
பக்தர்களுக்கான வசதிகள்
திருக்கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும். திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள், நடைபெறும் நேரங்கள் குறிப்பிடவேண்டும். திருக்கோயிலின் மண்டபங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
திரும்ப திரும்ப இடம் பெறக் கூடாது
ஒளிப்பதிவில், திருக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் காட்சிகள் வரும்போது அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் தூய்மையாக அணிந்திருக்க வேண்டும். ஒளிப்பதிவு செய்யப்படும் கோவில் வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறக்கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில், கோயில் பணியாளர்கள் இடம் பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.
முழுமையான சுவாமி உருவங்கள் பதிவு
ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும்போது, அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். கால், தலை என தனித்தனியாக இல்லாமல் முழுமையான தோற்றம் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். சுவாமி உருவங்களை தூரத்திலிருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்க வேண்டும். தல சிறப்பைச் சொல்லும் போதும், ஓதுவார்கள் பாடும்போதும், அவர்கள் உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல் வில்லை அளவில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது திருக்கோவிலில் சிறப்பான பகுதிகளை காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அச்சுப்பிழை கூடாது
ஓதுவார் பாடல் காட்சிப்படுத்துதல் சில மணித்துளிகளுக்கு மேல் போகக்கூடாது. அடிக்குறிப்பில் அபிஷேக பெயர்கள் அச்சுப்பிழை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு திருக்கோயிலில் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும்போது, அந்த திருக்கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
புராதான கல்வெட்டுக்கள்
முதுநிலை திருக்கோவில்களின் வீடியோ ஆவணப்படங்களை தயார் செய்யும் போது அவற்றின் திருக்கோவில்கள் குறித்த நிகழ்வுகளையும் சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம். இனிவருங்காலங்களில், நிகழ்வுகள் 4K கேமரா மூலம் மட்டுமே ஒளிப்பதிவு செய்யப் படவேண்டும். மூலிகை ஓவியங்கள், புராதான கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட அனைத்து குறிப்புகளையும் வீடியோ ஆவணப்படங்கள் எடுப்பதற்கும், திருக்கோயில்களில் இனி நடைபெறும் நிகழ்வுகளை வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.