அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்.. ஜெயக்குமார் காட்டம்
சென்னை: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை நிதியமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு புதிய பெயர் வைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 'இது நம்ம ஊரு மீன்கள்' என்ற பெயரில் மீன்வளத் துறை சார்பாக உலகம் முழுவதும் மீன்கள் விற்கப்படும்.
தூண்டுதல்
மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு தனது நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்தும் தொடர்ந்து யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
வரியை உயர்த்த வேண்டும்
அரசிற்கு வரக்கூடிய வருமானத்தில் 71 சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும், தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே அதனை புரிந்து கொண்டு தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டுமானாலும் ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக மக்களிடம் தான் வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களிடம் வரியை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு தர முடியுமா?
பாரத ரத்னா
தமிழக அமைச்சரவை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதை மத்திய அரசு நினைவில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபை மீறி பாரத ரத்னா விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கி இருந்தாலும், அவர் அந்த விருதுக்கு தகுதியானவர் என்பதால் அதனை வரவேற்கிறோம்.
மாயமான்
மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மாயமான் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கையே வாழ்வே மாயம் போன்ற நிலையில்தான் உள்ளது. எனவே அவருக்கு காண்பதெல்லாம் மாய மான் போல தெரியும். கருத்துக்கணிப்புகள் கருத்துத் திணிப்பாக இருக்கின்றன. நாளையே நான் ஒரு கருத்துக்கணிப்பை தயார் செய்து வெளியிட்டால் அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?