மத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6,000 மானியத்தை விவசாயிகள் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்காக விளை நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய விவசாயிகளுக்கான சிறப்பு இயக்கத்தை, அரசு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, பெரும்பான்மையான தமிழக விவசாயிகள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் மற்றும் இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதிலும் சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கை பின்வருமாறு: ஒட்டு மொத்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெரும் சவாலாக உள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவு உயர்ந்திருப்பது போன்ற காரணங்களால் வேளாண் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இச்சூழலில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களும் அதிகமாக காணப்படுகின்றன. அவர்களின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் வகையில் சிறு,குறு விவசாயிகளுக்கு, தலா ரூ.6,000 நிதி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 தவணைகளில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்படி முதற்கட்டமாக 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான், மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெற தகுதியான விவசாயிகளில் 70.66 சதவீதத்தினருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவில்லை.
சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம்? திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பதில்
இதற்கு முதல் காரணம் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 உதவி பெற விண்ணப்பிக்கும் உழவரின் பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு, அவர்களின் நிலங்களுக்கான பட்டா அவர்களின் பெயரில் இல்லை.
நில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதது, குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் பிரித்துக் கொண்டாலும், அதை அவர்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரப்பதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்து விடுவது போன்றவை தான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும்.
எனவே மத்திய அரசு நிதியை பெரும்பான்மையான விவசாயிகள் பெற முடியாமல் போய்விட்டால், அவர்களின் துயரங்களும், தற்கொலைகளும் தொடர் கதையாகும். மத்திய அரசு அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
எனவே விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் உழவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.