அரசு மருத்துவர்கள் மீது 'பிரேக் இன் சர்வீஸ்' நடவடிக்கை கிடையாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி
சென்னை: அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து, பணி முறிவு (பிரேக் இன் சர்வீஸ்) நடவடிக்கையை தமிழக அரசு கைவிடுகிறது என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவர்கள் சங்கத்தினர் சிலரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சில சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். சிலர் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று மாலைக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்பா விட்டால், பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அந்த இடங்களுக்கு புதிய மருத்துவர்களை நியமிப்போம், மாலை அதற்கான பணி தொடங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் நேற்று அளித்த பேட்டியில், மருத்துவர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர், போராட்டத்தை மருத்துவர்கள் கைவிடுவதையொட்டி பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கையை தமிழக அரசு கைவிடுகிறது. அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்ற, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.
மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற அமைச்சரின் பேட்டியால் அரசு மருத்துவர்களும் ஓரளவுக்கு திருப்தி அடைந்து உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் அதிக அளவுக்கு பரவிக் கொண்டு இருக்கின்றன. எனவே அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் சாமானிய ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், தற்போது மக்களுக்கும் நிம்மதி கிடைத்துள்ளது.