நீங்கள் நல்லா பேசுவீங்க.. ஆனால் இப்ப வேண்டாம்.. எழுந்த ஸ்டாலினை ஆஃப் செய்த ஆளுநர்
சென்னை: நீங்கள் சிறந்த பேச்சாளர். உங்கள் பேச்சுத் திறனை விவாதத்தில் காண்பியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி வன்முறையை தூண்டிவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த நபர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது... திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
முதல் கூட்டத் தொடர்
இந்த சம்பவத்தை ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டித்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தந்தது குறித்த விவகாரம் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கைதட்டி
அதன்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற ஆயத்தமானார். அப்போது அவர் அனைவருக்கும் வணக்கம். எம்எல்ஏக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி வரவேற்றனர்.
மறுப்பு
இதையடுத்து ஆளுநர் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்குமாறு கோரினர். அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.
வேண்டுகோள்
எனினும் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தனது கோரிக்கையை கூறினார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆளுநர் பேசுகையில் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.
எல்லாம் தெரியும்
நான் புதியவன் அல்ல. இங்கு வந்து இரு ஆண்டுகள் ஆயிற்று. எனக்கு எல்லாம் தெரியும். நீங்கள் சிறந்த பேச்சாளர். ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்காகத்தான் இந்த சட்டசபை. நீங்கள் உங்கள் பேச்சுத் திறமையை விவாதத்தின் போது பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார். இதை கேட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் ஆளுநர் உரையை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.