7 தமிழர் விடுதலை.. ஆளுநர் தாமதம் செய்வது ஏன்? மார்ச் 9க்குள் முடிவெடுங்கள்.. ராமதாஸ் கெடு!
சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மார்ச் 9ம் தேதிக்குள் தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மார்ச் 9ம் தேதிக்குள் தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விதி எண் 161ன் மூலம் தமிழக அரசே விடுதலைக்கு இவர்களின் பரிந்துரை செய்யலாம். இதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தும் இன்னும் இவர்களை ஆளுநர் விடுதலை செய்யாமல் உள்ளார். தற்போது இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காமல் தண்டிக்கப்பட்ட 7 பேரை இத்தனை ஆண்டுகளாக அரசு சிறையில் வைத்து இருக்கிறது. அவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்கு நியாயமான ஒரு காரணம் கூட கிடையாது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு.
விடுதலை செய்யலாம்
அவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாட்டு அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுனருக்கு பரிந்துரைத்தது.
ஒன்றே ஒன்றுதான்
ஆனால் அதன் மீதான முடிவை ஆளுநர் தரப்பு இன்னும் எடுக்கவில்லை. 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை 7 தமிழர் விடுதலை விஷயத்தில் முடிவெடுக்கப்படாதது ஏன்? என்பதை மக்களுக்கு ஆளுனர் மாளிகை விளக்க வேண்டும். 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய நேரத்தில், அவர்களின் விடுதலைக்கு எதிராக இருந்த அம்சம் ஒன்றே ஒன்று தான்.
அதுவும் இல்லை
ஆனால், இப்போது அது கூட கிடையாது. அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது தான். அதுவும் கூட அமைச்சரவையின் பரிந்துரையை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதால், இப்போது எந்தத் தடையும் இல்லை. ஆனாலும், மறைமுகமாக அதை காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் மாளிகை தாமதம் செய்து வருகிறது.
நாள் குறித்தார்
ஆனால், எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், இனியும் 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் தாமதிப்பது நியாயமற்றது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 9ம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ள மனிதச்சங்கிலிக்கு பாமக ஆதரவு அளிக்கும். ஆனால் அதற்கு முன்பாகவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான ஆணையில் ஆளுனர் கையெழுத்திட வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.