ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம்: மத்திய அரசு தகவல்
சென்னை: முன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக, அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருணை மனு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடுவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுவர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நளினி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறப்பட்டுள்ளது
தமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்
இதனையடுத்து வழக்கின் விசாரணை வாதங்களுக்காக பிப்ரவரி 12 தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.