நீட் தேர்வு, வ.உ.சி, வேலுநாச்சியார்.. ஒற்றை அறிக்கை.. மொத்தமாக கொட்டிய ஆளுநர் ரவி.. பரபரப்பு பின்னணி
சென்னை : வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் ஆகியோரின் பெயர்களை தனது வாழ்த்துச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவு எனவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ததன் காரணமாக அந்த எண்ணிக்கை கணிசமாக உயரந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
குடியரசு தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அன்புமிக்க எனது தமிழக சகோதர, சகோதரிகளே,வணக்கம். மங்களகரமான நமது 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துகளையும் என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதுதான் ஆனந்த் மஹேந்திரா.. தனது ஷோரூமில் அவமதிக்கப்பட்ட விவசாயி! நேரடியாக தலையீட்டு நடவடிக்கை
வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம் என ஆளுநர் கூறியுள்ளதுதான் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
ராஜ்பவன் அறிக்கை
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு காரணமும், பின்னணியும் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில்தான் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அதன் பொருட்டு நீ...ண்ட அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது ராஜ்பவன் மாளிகை. அந்த வாழ்த்துச் செய்தியில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கும் ஆளுநர், ஓரிடத்தில், நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவு. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ததன் காரணமாக அதன் எண்ணிக்கை கணிசமாக உயரந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் நீட் தேர்வு
இப்படி அவர் சொன்னதற்கு சில பின்னணிகள் இருப்பதாக சொல்கிறது கோட்டை வட்டாரம். அதாவது, இந்தாண்டின் சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்கியபோது, தனது உரையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது என பதிவு செய்தார். அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக எதையும் சொல்ல அவர் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அவர் உரை நிகழ்த்தி விட்டு ராஜ்பவன் வருவதற்குள், திமுக டி.ஆர்.பாலு, நீட் தேர்வு குறித்த கோப்பினை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் கிடப்பிலேயே வைத்திருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோபமாக பேட்டித்தந்தார்.
நீட் தேர்வால் நல்லது
பாலுவின் கருத்தை திமுக தலைமையின் கருத்தாகவே கவர்னர் எடுத்துக் கொண்டார். மேலும், அனைத்து கட்சி கூட்டத்தில் அவருக்கு எதிரான கருத்துக்கள் பதிவு செய்தார் ஸ்டாலின். இந்த ரெண்டு சம்பவங்களும் கவர்னருக்கு வருத்தத்தை தந்திருக்கிறது. இந்த நிலையில், எந்த நீட்டை வைத்து என்னை கண்டிக்கிறீர்களோ அந்த நீட்டினால் ஏழை மாணவர்களுக்கு நல்லதுதான் நடக்கிறது என்பதை நிலைநிறுத்தும் வகையில் தனது குடியரசு தின அறிக்கையில் தெரிவித்து விட்டு அரசு நிகழ்ச்சியில் கொடி ஏற்ற வருகிறேன் என்பதை சொல்லும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தி இருக்கிறது என்று சொல்கிறது கோட்டை வட்டாரம்.
குடியரசு தின அணிவகுப்பு
மேலும். டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டன அல்லவா ! அந்த தியாகிகளின் பெயர்களை தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு, சுதந்திரத்திற்காக போரட்டிய தமிழக வீரர்களின் புகழை மறைக்க நாங்கள் நினைக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் ஆகியோரின் பெயர்களை தனது வாழ்த்துச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார் கவர்னர் ரவி.