வடகிழக்கு மாநிலங்களில் 2ஆம் மொழியாக தமிழ்! நானே எல்லா முதல்வர்களிடம் பேசுகிறேன்! ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. கேரளா, மேற்கு வங்கம் எனப் பல மாநிலங்களில் இதே நிலை தான்.
தமிழ்நாட்டிலும் கூட அதேபோலத் தான் மோதல் போக்கு இருக்கிறது. இதற்கிடையே தமிழக அரசு நிறைவேற்றிய அனுப்பும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அந்த 24 மணி நேரம் என்ன நடந்தது? பார்க்க கூட நேரம் தராத ஆர்.என் ரவி.. தீவிரமாக முயன்ற திமுக.. பின்னணி
ஆளுநர் ஆர்.என். ரவி
அதேபோல ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அரசியல் ரீதியாகப் பேசுவதாகவும் திமுகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். மேலும், சில நேரங்களில் ஆளுநர் பேசும் போது சர்ச்சை கருத்துகளைக் கூறுவதாகவும் திமுகவினர் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ஆளுநர் தனது வரம்பிற்குள்ளேயே செயல்படுவதாக பாஜகவினர் கூறுகின்றனர். மேலும், திமுகவினரின் முறைகேடுகளுக்கு ஆளுநர் அனுமதிப்பதில்லை என்றும் இதன் காரணமாகவே திமுகவினர் இப்படிச் சொல்லி வருவதாகவும் பதில் அளிக்கிறார்கள்.
பட்டமளிப்பு விழா
இது ஒரு பக்கம் இருக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களில் தொடர்ந்து கலந்து கொண்டு பேசி வருகிறார். இன்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், அறிவை வளர்க்கத் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வி அறிவு
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "இந்தியாவின் உருவாக்கத்திற்கே அடித்தளமிட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். நாட்டின் வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்கு இன்றியமையாதது. தாய் மொழியில் படித்தால் மட்டுமே அறிவை வளர்க்க முடியும். புத்தக அறிவு மட்டும் எப்போதும் மாணவர்களுக்கு போதாது. திறன் கல்வி மட்டுமே மாணவர்களை முழுமையானவர்களாக மாற்றும். இதுபோன்ற மாணவர்களைத் தான் ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும். இப்போது கற்பிக்கும் முறையும் பெரியளவில் மாறியுள்ளது. முன்பு இருந்ததை போல இங்கு இப்போது கல்வி முறை இல்லை.
திருக்குறள்
அனைத்து மாணவர்களும் ஆலமர விதையைப் போன்றவர்கள் தான். அவர்கள் பெரிய மரமாக வளர ஆசிரியர்களே உதவ வேண்டும். மாணவர்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும். தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. இதை ஒட்டுமொத்த நாடும் நீண்ட காலமாகவே அறிந்துள்ளது. திருக்குறளை அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் வைக்க வேண்டும். இதற்காக அனைத்து மாநில மொழிகளிலும் அதை மொழிபெயர்க்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்
உத்தரப் பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி 13 இந்திய மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். இதுவும் பிரதமர் மோடி தமிழுக்குச் செய்த பெருமை தான். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளைப் படைக்க உள்ளது. இதற்கு மாணவர்களின் பங்களிப்பு நமக்குத் தேவை. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக்குவது குறித்து அம்மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
ஹரியானா முதல்வர்
தமிழ் மொழியால் ஒட்டுமொத்த தேசமே பெருமை கொள்கிறார். தமிழ் இலக்கியம் தத்துவத்தால் தேசத்திற்குப் பெருமை ஹரியானா முதல்வர் அழகாகத் தமிழ் பேசுகிறார். அவரிடம் எப்படி உங்களால் இவ்வளவு அழகாகத் தமிழ் பேச முடிகிறது என்று கேட்டேன். எப்படி தமிழை கற்றீர்கள் எனக் கேட்டேன். ஹரியானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விருப்ப மொழியாக இருந்து உள்ளது. ஆனால், பின் ஏதோ சில காரணங்களால் நீக்கப்பட்டு விட்டன. மீண்டும் அவற்றைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.