தமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தகவல் ஆணையராக நியமனம்.. புதிய செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால், தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயலாளர் சண்முகம் இன்று இரவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இரண்டு வருடங்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்ட போது, அவரது செயலாளராக பதவி நியமிக்கப்பட்டவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு, கேடர், ஐஏஎஸ் அதிகாரியான, ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் கலெக்டராகவும் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2013ல் தமிழக உள்துறை செயலாளர் பொறுப்பிலும் இருந்தவர். பின்னர், டெல்லி சென்று மத்திய அரசு பொறுப்பில் இருந்தார். இதன் பிறகு இரண்டு வருடமாக தமிழக ஆளுநரின் செயலாளராக பதவி வகித்தார். இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ராஜகோபால் தமிழக தகவல் ஆணையர், பதவியில் தொடர முடியும்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக பதவி வகித்தவர்.