கஜா புயல் பாதிப்பு.. தமிழக ஆளுநர் நாகையில் இன்று நேரில் ஆய்வு
புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆளுநர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை: கஜா புயல் பாதித்த 3 மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று நாகை சென்றுள்ளார்.
கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அந்த சமயத்தில், வீசி சென்ற புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன.
புயல் அடித்து இத்தனை நாள் ஆகியும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அம்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு உள்பட அனைவருமே செய்து வருகிறார்கள்.
சேத மதிப்பு
மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இன்றைக்கும் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் புயல் சேதத்தின் மதிப்பிடும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட உள்ளார்.
3 மாவட்டங்கள்
இந்நிலையில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஆளுநர் செல்ல உள்ளார்.
இன்று நாகை மாவட்டம்
இன்றைக்கு நாகை மாவட்டத்திலும், நாளை திருவாரூர், தஞ்சை மாவட்டங்களும் ஆளுநர் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுவார்.
வேண்டுகோள்
இதனிடையே, புயல் பாதிப்பை நேரில் பார்வையிட வரும் ஆளுநருக்கு புத்தகம், மலர்கொத்து போன்றவை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.