ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. அரசு பஸ் மீது மோதி.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
நந்தனத்தில் பஸ் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்
Recommended Video
சென்னை: 3 பெண்கள் ஒரே பைக்கில் வந்தபோது, சென்னை மாநகர பஸ் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சிவா, நாகலட்சுமி, பவானி ஆகியோர் என்ஜினியர்கள். எழும்பூரில் வேலைபார்த்து இவர்கள் சென்னை வேளச்சேரியில் தங்கி உள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு இவர்கள் 3 பேரும் ஒரே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். ஒய்எம்சிஏ மைதானம் அருகே சென்றபோது, அவர்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனத்துக்கு ஒரு மாநகர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
முந்தி செல்ல முயற்சி
அதன் அருகில் பைக்கில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அந்த பஸ்சுக்கும் பைக்குக்கும் நடுவில் பெண்களின் டூவீலர் நுழைந்துள்ளது. அதாவது பைக்கை முந்தி செல்ல பெண்கள் முயன்றுள்ளனர். இதில் நிலைதடுமாறி 3 பெண்களும் பஸ்சின் முன்சக்கரத்தில் விழுந்தனர். அவர்கள் விழுந்ததை கவனிக்காத பஸ் டிரைவர் தொடர்ந்து பஸ்ஸை இயக்கினார்.
விசாரணை
இதில் பவானி, நாகலட்சுமி ஆகியோர் தலை, சக்கரத்தில் நசுங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா என்ற பெண் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகலறிந்த போலீஸார் விரைந்து வந்து விசாரணையை கையில் எடுத்தனர்.
கைது
மிகவும் ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த சிவாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக, விபத்து ஏற்படுத்தி 2 உயிர்களை பறித்த அரசு பஸ் டிரைவர் குணசேகரன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிசிடிடிவி காட்சி
மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த விபத்து காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்தனர். அதில், சிவா மட்டும் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். மற்ற 2 பேர் ஹெல்மட் அணியவில்லை என்பது கண்டறியப்பட்டது. பஸ் மோதியதில் சிவா அணிந்திருந்த அந்த ஹெல்மெட் கழண்டு கீழே விழுகிறது. இதனால் அவர் ஹெல்மட்டை சரியாக அணியவில்லை என்று கூறப்படுகிறது.