கோவிலுக்கு தேவைப்படாத நிலங்கள்.. ஏழை மக்களுக்கு பட்டா.. ஹைகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பதில் மனு தாக்கல்
இந்த வழக்கில் அரசு பதிலளிக்க நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அமர்வு உத்தரவிட்டதை அடுத்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் துணை செயலாளர் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புறம்போக்கு இடங்கள்
அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறப்பட்டுள்ளது..
அறநிலையத்துறை
கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
கோவிலுக்கு பணம்
கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்கள்
ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..