அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம்... விருப்பமே இல்லாமல் ஒப்புதல் தந்த முதல்வர்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியாகிய நிலையில், இதற்கு விருப்பமே இல்லாமல் தான் முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
காரணம் பொதுமுடக்கம் உள்ள இந்த பேரிடர் காலத்தில் கூட காவல்துறையினர், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையினர் மக்கள் பணியாற்றி வருவதால், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சோர்வை தரும் என முதல்வர் நினைத்திருக்கிறார். இதனால் அரசு ஊழியர்கள் ஊதிய விவகாரத்தில் கை வைக்க வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்.
ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க வேறுவழியில்லை என்றும், மத்திய அரசே அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்திருக்கும் போது நாமும் அதை பின்பற்றினால் தவறில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இயல்பாகவே அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி நடக்காதவர். நிதி சிக்கன நடவடிக்கையாக வேறு வழியின்றி அரைமனதுடன் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு என்ற அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசின் இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இறுக்கம் செய்து அவர்களை இன்னலுக்கு ஆளாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டாலினின் இந்த ஆதரவு குரல் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் அரசு தரப்புக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
பறக்கும் தட்டுகள் உண்மைதான்.. 3 வீடியோக்களை வெளியிட்டு உறுதிபடுத்திய அமெரிக்கா!
இக்கட்டான இந்த பேரிடரில் உயிரை பணயம் வைத்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு மேலும் அயர்வும், ஆர்வமின்மையும் ஏற்படும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.