தமிழகத்தில் ரூ.9.66 கோடியில்...3500 அம்மா நகரும் நியாய விலைக்கடை...அரசாணை வெளியீடு!!
சென்னை: தமிழகத்தில் ரூ.9.66 கோடி மதிப்பில் 3500 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் அமைத்து செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசி இருந்தார்.
இதன்படி, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இதற்கு அனுமதி வழங்க வேண்டும். அவர்கள் அனுமதி கிடைத்த பின்னர் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட அளவில் செயல்படுத்துவது குறித்து அந்தந்த மாவட்டக் கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த இடம், எந்த நாளில் பொருட்கள் வழங்கப்படும் என்பதை மாவட்டக் கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். நிர்ணயிக்கக்கூடிய இடங்களில் அம்மா நியாயவிலைக்கடை களை கட்டாயமாக இயக்க வேண்டும்.
நகரும் நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் தவறும்பட்சத்தில், குறிப்பிட்ட நாளில் வழக்கம்போல ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இந்த வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு என்று ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நகரும் நியாய விலைக்கடை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடை வாகனம் மூடியே இருக்க வேண்டும், எடை இயந்திரம் சரியான முறையில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மின்னணு எடை தராசு வைத்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமி
தமிழகத்தில் எந்தெந்த மண்டலத்தில் எத்தனை கடைகள் என்று பார்க்கலாம்:
அரியலூர் மாவட்டத்தில் 41 நகரும் நியாயவிலைக்கடைகள், கோவையில் 33, நீலகிரியில் 11, கடலூரில் 72, தருமபுரியில் 118, திண்டுக்கல்ளில் 157, ஈரோட்டில் 51, காஞ்சியில் 107, திருவாரூரில் 125, திருவண்ணாமலையில் 212, திருவள்ளூரில் 118, திருப்பூரில் 77, திருநெல்வேலியில் 110, திருச்சியில் 105, பெரம்பலூரில் 20, புதுக்கோட்டையில் 100, ராமநாதபுரத்தில் 71, சேலத்தில் 109, சிவகங்கையில் 70, தஞ்சையில் 147, தேனியில் 75, குமரியில் 55, கரூரில் 146, கிருஷ்ணகிரியில் 168, மதுரையில் 101, நாகையில் 262, நாமாக்கல்ளில் 115, விருதுநகரில் 60, விழுப்புரத்தில் 71, வேலூரில் 109, தூத்துக்குடியில் 84 உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ. 9.66 கோடி மதிப்பீல் செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.