இடஒதுக்கீடு.. வருமான சான்றிதழ் வழங்குவதை நிறுத்திவைத்ததை எதிர்த்து ஹைகோர்டில் வழக்கு
சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய வருமான சான்று மற்றும் சொத்து சான்றுகள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற அந்தந்த தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சம்ரப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4 ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
3,000 சிங்கள ராணுவ வீரர்கள் படுகொலை செய்ததாக ஒப்புதல்- விசாரணைக்கு கருணா ஆஜர்
எந்த காரணமும் குறிப்பிடாமல், சொத்து மற்றும் வருமானச் சான்றுகள் வழங்க வேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்
சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து வரும் 30 ஆம் தேதி பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.