இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு
சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென்னையில் உள்ள மணலியில் இருந்து தான் வேதிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் Coldbest - PC Syrup என்ற இருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த 17ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தன. 17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
விஷ வேதிபொருள்
குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு Coldbest - PC மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், ‘டைதிலீன் கிளைகோல்' ( ‘diethylene glycol')என்ற வேதிப்பொருள் இருந்ததும், இதனால் விஷத்தன்மை மருந்தில் கூடியிருப்பதும் தெரியவந்தது என்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் உதவி மருந்துகள் கட்டுப்பாட்டாளர் சுரிந்தர் மோகன் தெரிவித்தார்.
மருந்தை திருப்பி அனுப்ப
இதையடுத்து Coldbest - PC இருமல் மருந்தின் தொகுதிகள் அனுப்பப்பட்ட எட்டு மாநிலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர், அந்த மருந்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி இமாச்சலப் பிரதேசம் (உற்பத்தியாளர் அமைந்துள்ள இடம்), ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரிகள் இந்த அறிவிப்பை அனுப்பி உள்ளார்கள்.
அதிரடி தடை
சுமார் 5,500 யூனிட்டுகள் கோல்ட்பெஸ்ட்-பிசி சிரப் இந்தியாவின் 8 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் திரும்பபெறப்பட்டு வருகிறார்கள். இமாச்சலப் பிரதேச சுகாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் சிரமௌர் மாவட்டத்தில் உள்ள காலா ஆம்ப் பகுதியில் இருக்கும் டிஜிட்டல் விஷன் நிறுவன பிரிவில் அனைத்து வகையான மருந்து உற்பத்தி மற்றும் உருவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இங்கிருந்து தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்துதான் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
மருந்த விற்பனை
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் Coldbest - PC இருமல் மருந்து விற்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. தடை விதிக்கப்பட்ட இந்த மருந்தின் யூனிட் மருந்துகள் தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே திருச்சியில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில் " Coldbest - PCமருந்து சரியில்லை என்றும் அதை விநியோகிக்கக்கூடாது என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிரப்பை யாரும் நிர்வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம்" என்றார்.
குழந்தைகள் உயிரிழப்பு
மருந்தை தயாரித்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், மருந்தின் வேதிப்பொருளை ஆரம்ப நிலையிலயே சோதிக்காது ஏன் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. நச்சுத்தன்மை மிகுந்த மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த பிறகு ஆய்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதை முதலிலேயே செய்திருப்பார்கள் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்காமல் காப்பபாற்றுப்பட்டு இருக்கும் என்பதே உண்மை.