விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி.. உணர்ச்சி மேலிட கண்டு களித்த அரசுப் பள்ளிக் குழந்தைகள்!
சென்னை: சந்திரயான் 2 விண்கலம் செலுத்தப்பட்ட மகத்தான சாதனை உணர்வுகளிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, கல்வித்துறையில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் செயலை செய்து வருகிறது. குறிப்பாக விண்வெளியியல், ரோபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் மாணவர்களின் அறிவு சார் முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து அவர்களை சாதனை படைக்க தூண்டுகோலாக உள்ளது, உதவுகிறது.
இந்த நிலையில் தற்போது சந்திரயான் 2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்திய நிகழ்வைக் காண சென்னையைச் சேர்ந்த 100 அரசுப் பள்ளிக்கூட பிள்ளைகளை ஸ்ரீஹரிகோட்டா அழைத்துச் சென்றிருந்தது ஸ்பேஸ் கிட்ஸ் குழு. அதன் தலைமை செயலதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசன் தலைமையிலான இந்தக் குழுவில் சென்னையைச் சேர்ந்த எம்சிஎன் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியரும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர பஞ்சாபிலிருந்து வந்திருந்த 22 மாணவ மாணவியரையும் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு ஸ்ரீஹரிகோட்டா அழைத்துச் சென்று ராக்கெட் ஏவுதலை நேரில் காண வைத்து மகிழ்வித்தனர்.
விக்ரம் சாராபாயின் 100வது பிறந்த தின ஆண்டையொட்டி மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது ஸ்பேஸ் கிட்ஸ். ஜூலை மாதத்தில் சந்திரயான் 2 ஏவுதலை நேரில் காண அரசுப் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் திட்டத்தை தீட்டியிருந்தனர். அதன்படியே அவர்களை அழைத்தும் சென்று அவர்களின் முகத்திலும் உள்ளத்திலும் புது உணர்வைப் புகுத்தியது ஸ்பேஸ் கிட்ஸ்.
வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், வேகத்தையும் இது அவர்களுக்குள் ஊட்டியது என்றால் அது மிகையாகாது.