EXCLUSIVE: இருளர் சமுதாய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் சசிகலா டீச்சர்!
இருளர் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை காட்டி வருகிறார் ஆசிரியை சசிகலா
சென்னை: இருளர் சமுதாய மாணவர்களின் நலனுக்காகவும், அக்கறைக்காகவும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் ஆசிரியை சசிகலா! அரைவயிறு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிள்ளை பேரூராட்சியின் எம்ஜிஆர் நகரில் இருக்கும் எங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் சசிகலா டீச்சராக வேலை பார்க்கிறார்.
அது ஒரு ஆசிரியை வேலை என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. சத்தமேயில்லாமல் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்! அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரைதான் உள்ளது. கிட்டத்தட்ட 200 பிள்ளைகள் படிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
எனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு
இருளர் சமுதாயம்
இந்த பகுதி இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். ஒரு காலத்தில் வயல்களில் எலிகளை பிடித்து கொண்டிருந்தவர்கள். இதுதான் அவர்களுக்கு பிழைப்பு! நாளடைவில் மீன் பிடித்து வந்தார்கள். தொழில் ரீதியான மாற்றம் இருந்தாலும் இவர்களின் அடிப்படை மாறவில்லை. நூற்றாண்டாக படிப்பு என்ற வாசமே இல்லாதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் உள்ள பெற்றோரை தேடி சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கேட்டுக் கொண்டவர்தான் ஆசிரியர் சசிகலா!
அரைவயிறு
தினந்தோறும் பள்ளிக்கு பிள்ளைகள் வருவது என்பது ரொம்பவே கஷ்டம்தான். அப்படியே வந்தாலும் ஒருநாள் முழுக்க பள்ளியில் உட்கார முடியாத குடும்ப சூழல், அப்படியே உட்கார்ந்து பாடத்தை கவனித்தாலும், அரைவயிறோடுதான் படிப்பு!
உபகரணங்கள்
இந்த இடத்தில்தான் சசிகலா சிரத்தையை முன்னெடுத்தார். தன் சம்பளத்தில் பெரும்பாலான தொகையை மாணவர்களுக்கு செலவழித்தார். அவர்களின் பாடப்புத்தகங்கள், சாப்பாடு, படிப்புக்கான உபகரணங்கள் என கணக்கு பார்க்காமல் வாங்கி தந்தார். சசிகலாவின் அன்பும் அக்கறையும் உணர்வுபூர்வமானது. அதன்விளைவுதான் 193 பேர் படித்து வருகிறார்கள். 18 வருடம் சசிகலா டீச்சராக வேலை பார்த்தாலும், ஆரம்ப கால 7 வருடங்கள் முக்கியமானது.. தவமானது!
செய்முறை விளக்கங்கள்
மாணவர்களின் கவனத்தை ஈர்க்க 52 ஆயிரம் சொந்த பணத்தில் ஒரு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து கற்றலுக்காக ஏற்பாடு செய்தார். களப்பயணம், செய்முறை விளக்கங்கள், கலந்துரையாடல் என எந்த குறையும் வைக்காமல் அனைத்தையும் தன் சொந்த செலவில் கவனித்து வருகிறார் சசிகலா! அது மட்டுமா.. தீபாவளி பண்டிகைக்கும் பள்ளியில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் சொந்த செலவில் துணி எடுத்து கொடுத்து அவர்களுடன் கொண்டாடி வருகிறார். அதனால்தான் நல்லாசிரியர் விருது சசிகலாவிற்கு தேடி வந்தது!
3 பேர் என்ஜினியரிங்
இவ்வளவும் செய்தீர்களே.. இதைபற்றி எப்படி உணருகிறீர்கள் என்று ஆசிரியை சசிகலாவை கேட்டால், "இதில் என் பங்கு மட்டும் சொல்லிவிட முடியாது. என் கணவரின் ஒத்துழைப்பும், பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலும் இதில் ரொம்பவே முக்கியம். இது என் தனிப்பட்ட வெற்றி என்பதை காட்டிலும், என்னுடன் பணியாற்றும் சக ஆசிரிய பெருமக்களின் பங்கும் இதில் ஏராளம். இவர்களின் உதவியால்தான் என்னால் எல்லாம் சாத்தியமானது. இருந்தாலும், நான் பட்ட பாடு வீண் போகவில்லை. என்னிடம் படித்த இருளர் வகுப்பு பிள்ளைகளில் 30 பேர் காலேஜ் படிக்கிறார்கள். 3 பேர் என்ஜினியரிங் படித்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு பள்ளி தரம்
எனக்கு ஒரே ஒரு கவலைதான்.. இங்கு 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வெளியேறினால், இவர்களை இனத்தை காட்டி புறக்கணிக்கப்படுகிறார்கள், ஊரில் உள்ளவர்களும்அரசு பள்ளியை புறக்கணிக்கிறார்கள். அதனால் 8-ம் வகுப்புக்கு பிறகு படிப்பு தடைபடும் சூழல் ஏற்படுகிறது. அதனால் இதே பள்ளியை அரசு பள்ளியாக தரம் உயர்த்தி விட்டால், எனக்கு அதைவிட சந்தோஷம் இருக்க முடியாது. நிச்சயம் இந்த நிலை மாறும்" என்று சொல்கிறார் சசிகலா!
உண்மைதான்.. சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை வழங்குவதைவிட மிகச்சிறந்த கற்பித்தல் எதுவும் இருந்துவிட போவதில்லையே!