டாக்டர், நர்சுகளை வீட்டை காலி செய்ய சொன்னால்.. வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருக்கும் வாடகை வீட்டை காலி செய்யும்படி மிரட்டும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அவசர அரசாணை பிறப்பித்துள்ளளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. சென்னை ஆவடியில் மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்ககள் எதிப்பு தெரிவித்தனர். இதேபோல் கொரோனாவால் பலியான சென்னை அமைந்தகரை மருத்துவரை புதைக்கவும் எதிர்ப்பு எழுந்தது.
தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் 21 நாட்கள் குவாரண்டைனில் இருப்பதால் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், "வீட்டின் உரிமையாளர்கள் சிலர் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தங்களது வீட்டில் இருந்து காலி செய்ய சொல்வது, அவரது கடமையை செய்ய தடையை ஏற்படுத்துவது போன்றது . எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் வீட்டின் உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.