தொகுதி நம்பர்ஸை பார்க்காதீங்க.. பாஜகவுக்கு ஆதரவு தாங்க.. விஜயகாந்திடம் வலியுறுத்திய கோயல்!
சென்னை: தொகுதி எண்ணிக்கையை குறித்து கவலைப்படாதீர்கள் என்றும் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திடம் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தொழிலதிபர் வீட்டில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்தார்.
பாஜக கூட்டணி
இந்த நிலையில் தேமுதிகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. இந்த நிலையில் இன்று அதிமுகவுடன் பாமக, பாஜக கூட்டணி என முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை
அதன்படி தேமுதிக கூட்டணியும் இன்று முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜகவின் பியூஷ் கோயல் சந்தித்தார். அப்போது தொகுதி கூட்டணி பேச்சுவார்த்தை பேசப்பட்டது.
இழுபறி
ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிக்கு அதிமுக கூட்டணி உடன்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்தின் கூட்டணி இழுபறியில் இருந்தது.
விஜயகாந்த்
அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து கவலைப்படாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜயகாந்திடம் கோயல் கேட்டு கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு விஜயகாந்த் உடன்படவில்லையாம்.