Jangit: பங்க் குமார் அன் கோ.. பவாரியா கும்பல்.. அடித்து நொறுக்கி ஒழித்த.."சிங்கம்" ஜாங்கிட்!
Recommended Video
சென்னை: "கண்டிப்பான போலீஸ் ஆபீசர்" என்ற வார்த்தையை சினிமாவில்தான் நிறைய கேட்டிருப்போம். அதை தனது இறுதிநாள் வரை கடைப்பிடித்தவர்தான் ஜாங்கிட்.. தன்னை பற்றி சினிமாவாக எடுக்கும் அளவுக்கு குட் ஆபீசர் என்ற பெயர் எடுத்த போலீஸ் அதிகாரி ஜாங்கிட்தான் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1990 - 99ம் ஆண்டுகளில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், அப்படி ஒரு கலவரம் வெடித்து சிதறியது.. வன்முறை பரவி கிடந்தது. இந்த ஜாதிகலவரத்தை எப்படி அடக்குவது என்றே தெரியாமல் விழித்த நேரம் அது.
அப்போதுதான் ஓய்வு பெற்ற நீதிபதி, கோமதிநாயகம் தலைமையிலான கமிஷன், எஸ்பியாக, ஜாங்கிட்டை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்தது.
சாதி கலவரம்
தூத்துக்குடியில் எஸ்பியாக பணியமர்த்தப்பட்ட ஜாங்கிட் தடாலடி மற்றும் அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தார். வெகு சீக்கிரத்திலேயே ஜாதிக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதை தொடர்ந்து மதுரை, நெல்லை, தஞ்சாவூர் டி.ஐ.ஜி.. பின்னர், நெல்லை, மதுரை கமிஷனர் என தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கினார்.
பவாரியா கும்பல்
இவரது பணியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பவாரியா கொள்ளை கும்பலை சொல்லலாம். ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை கலக்கிய பவாரியா கொள்ளை கும்பல், நம்ம தமிழ்நாட்டுக்குள் புகுந்து விட்டு வேலையை காட்ட ஆரம்பித்தது.
தீரன்
இந்தக் கும்பலை சேர்ந்த 13 பேரை பிடிப்பது ஜாங்கிட்டுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதனால் பல மாதங்கள் ராஜஸ்தானிலேயே முகாமிட்டு அவர்களை அவர்கள் இடத்திலேயே கைது செய்து அசாத்தியம் புரிந்தார். இவரது இந்த சாதனைதான் கார்த்தி நடித்த‘‘தீரன் அதிகாரம் ஒன்று'' என்ற பெயரில் படமாககூட வெளி வந்தது!
இரும்பு கூண்டுகள்
சென்னையில், பங்க்' குமார், வெள்ளை ரவி போன்றோரை என்கவுன்டர் செய்து சுட்டு பொசுக்கினார். ஏனெனில் இவர், துப்பாக்கி சுடுவதில் வல்லவரும் கூட. அது மட்டும் இல்லை.. இவரது திட்டத்தின்படிதான் தலைவர்களின் சிலைகளை சுற்றி இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டன என்ற விஷயம் நிறைய பேருக்கு தெரியாத உண்மை.
கலைகள்
இவ்வளவும் செய்த ஜாங்கிட்டின் பணி காலம் இன்றுடன் முடிகிறது. ஜாங்கிட் வெறும் கரடு முரடு மனிதர் என்ற பிம்பம் வெளியே தெரிந்தாலும் உண்மையில் அவர் அப்படி இல்லை. கலைகளை அழகாக ரசிக்ககூடியவர்.. நன்றாக எழுதுவார்.. இந்திய பொருளாதாரம், கலை சம்பந்தப்பட்ட 10 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
மறக்கவே முடியாது
34 வருஷங்கள் வேலைபார்த்த ஜாங்கிட்டுக்கு.. சிறந்த சேவைக்காக 2 முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை தமிழக முதல்வரின் பதக்கமும் கிடைத்துள்ளது. விருது, பதக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனைகளை கையாண்ட ஜாங்கிட்டை, தமிழக காவல்துறை ஆகட்டும், மக்கள் ஆகட்டும்.. அவ்வளவு சீக்கரம் மறந்துவிட மாட்டார்கள்!