திருவிளக்கை ஏற்றி வைத்தோம்.. திருமகளே.. வருக.. தேவியரின் ஒன்பது இரவுகள்!
நவராத்திரி.. ஒன்பது இரவுகளின் திருவிழா. இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரிய பண்டிகை எது என்றால் அது நவராத்திரிதான். மொத்த இந்தியாவும் பக்தி மயமாக காணப்படும் இந்த ஒன்பது நாட்களும்.
சக்தி தேவியை இந்த 9 நாட்கள் வணங்குகிறோம். 10 வது நாள் தசரா அல்லது விஜயதசமி என்று அழைப்பர். முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்காகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்காகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்காகவும் நாம் கொண்டாடுகிறோம்.
தேவியரின் கொலு இந்த 9 நாள் விழாவின் முக்கிய அம்சமாகும். கொலுவை பொம்மைகளை காட்சி படுத்துவது என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த நவராத்திரி விழாவை 10 நாட்கள் தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் சிறப்பாக கொண்டாடுவர். கொல்கத்தாவில் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
கொலு பொம்மைகள்
நவராத்திரி விழாவின் இன்னொரு முக்கிய அம்சம் தாண்டியா நடனம். இது வட இந்தியாவில் வெகு பிரசித்தி பெற்றது. இதை கொலு, போம்மா ஹப்பா, பொம்மை கொலுஅல்லது பொம்மலா கொலுவு என்றும் சொல்வர். திறமையான கிராமப்புற கைவினை கலைஞர்களை கொண்டு மிகவும் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் செய்யப்படும் பொம்மைகளை காணவே கண் கொள்ளாக் காட்சியாகும்.
சக்தி தேவி வாசம்
கொலு இருக்கும் 9 நாட்களும் சக்தி தேவி நம் வீட்டில் இருப்பார் என்று நம்பப்படுகிறது. நவராத்திரி நாட்களில் சுண்டல் வகைகளும், இதர இனிப்பு வகைகளும் ப்ரசாதகமாக படைக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவர்.
மாலை நேர பூஜை
பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து உண்பாராகள். மாலை வேளையில் அருகில் இருக்கும் சுமங்கலிகளை, சிறுவர், சிறுமிகளை அழைத்து தங்களால் இயன்றதை அளித்து மகிழ்வர். முக்கியமாக குங்குமம், மஞ்சள், மஞ்சள் சரடு, வெற்றிலை, பாக்கு அளிப்பார்கள்.
கொலு அமைப்பு
கொலு வைக்கும் முன்னர் அதாவது நவராத்திரி தொடங்கும் முன்னர் முளைப்பாரி அமைக்கப்பட வேண்டும். இதை கொலுவின் முன் வைக்க வேண்டும். இதற்கு வெந்தயம், கொள்ளு, ராகி என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொலு அமைக்கும் போது ஆத்தூர் சிறு செடிகளாக வளர்ந்து இருக்கும். அம்மாவாசை அன்று கொலுவை தயார் செய்ய வேண்டும். கொலு வடக்கு இல்லை என்றால் கிழக்கு திசை நோக்கி இருத்தல் நலம். கலசம் அமைக்கும் போது சரியான நேரம் பார்த்து அமைக்க வேண்டும். கலசம் பித்தளை செம்பு அல்லது பானையில் அரிசி பருப்பு மற்றும் நாணயங்களை இட்டு அமைக்க வேண்டும்.
விழாவின் போது பின்பற்ற வேண்டியவை
வீட்டை பூட்டி வைக்க கூடாது. வீட்டில் துணி தைக்க கூடாது. புலால் உணவு மற்றும் பூண்டு வெங்காயம் சேர்க்க கூடாது. எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இல்லத்தில் சண்டை போட கூடாது. இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறந்து நம் மாண்பை அழித்து வருகிறோம்.
கற்றுத் தருவோம்
மேற்கத்திய நாடுகளில் நம் கலாச்சாரத்தின் மீதும், நம் தமிழ் பண்பாட்டின் மீதும் அளவு கடந்த மரியாதையை வைத்துள்ளனர். கொலு வைக்க முடியாவிட்டாலும் இது போன்ற பண்டிகை தினத்தில் நம் குழந்தைகளுக்கு நம் மரபையும், நம் விழாக்களையும் எடுத்துரைத்து நல்லது பல பயிற்றுவித்து, ஈகை திறனை அவர்களுக்கு வளர்த்து, ஒன்று கூடி வாழும் நாகரிகத்தை கற்று தருவது பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை. குறிப்பாக நமது பாரம்பரிய உடையான பட்டுச் சேலைகளின் மாண்பும், மதிப்பும் இதுபோன்ற விழாக்களின்போதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை தம்பதியின் சிறப்பு நவராத்திரி
இப்படிப்பட்ட ஒரு விழாவை தங்களது இல்லத் திருவிழாவாக, பத்திரிகை எல்லாம் அடித்து பிரமாதமாக கொண்டாடி வருகின்றனர் சென்னை அருகே மறைமலை நகர் இளவழகனார் தெரு பகுதியில் வசித்து வரும் ஜி. மகாலட்சுமி- பி. கண்ணன் தம்பதியினர் மற்றும் விச்சு குடும்பத்தினர். நவராத்திரி விழாவுக்காக பத்திரிகை அடித்ததோடு இல்லாமல், வீட்டையே கொலு மண்டபமாக மாற்றியுள்ளனர் மகாலட்சுமி தம்பதியினர்.
விதம் விதமான கடவுள்கள்
விதம் விதமான கடவுள்கள் அடங்கிய கொலு பொம்மைக் காட்சி பார்க்கவே படு மகிழ்ச்சியாக உள்ளது. உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் வகையிலான, பரம திருப்தியை, நவ தேவியரின் அருள் மழையில் நனையும் விதமாக பொம்மைகளை வரிசைப்படுத்தி அடுக்கி வைத்துள்ள பாங்கை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஆஹா காட்சி
திருவிளையாடற் புராண காட்சிகள், திருப்பதி பிரம்மோற்சவ காட்சி, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி என விதம் விதமான கடவுள் பொம்மைகளை காட்சிப்படுத்தி வைத்துள்ளனர் கண்ணன் - மகாலட்சுமி தம்பதியினர். உண்மையிலேயே பாராட்ட வேண்டிய அருமையான கொலு இது.
சாதி மதம் இனமற்ற திருவிழா
சாதி மதம் இனம் மொழி பாராமல், சகோதரத்துவத்தை பேணி காக்கும் விழாவாக நவராத்திரி, மற்றும் இதர பண்டிகைகளையும் ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடி அவற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்துவோம்.
"அனைவருக்கும் இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள்"
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்"
"நாட்டில் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
எழுத்து: திவ்யா, குவைத்.