முடிஞ்சது போல.. "ஜாதி".. ஓவைசி.. வியூகம்.. "8 காரணங்கள்" குஜராத்தை அள்ளும் பாஜக.. சாதித்தது எப்படி?
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், பாஜக வெற்றி பெறுமா
சென்னை: குஜராத் தேர்தலின் முடிவுகள் இன்றைய தினம் வெளியாக உள்ள நிலையில், பாஜகவுக்கே பிரதான வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய & மற்றும் பிந்தைய கணிப்புகள் அறுதியிட்டு சொல்லி உள்ளன. எதிர்பார்க்கப்பட்ட முடிவு என்றாலும்கூட, குஜராத் பாஜக எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளமானவை. வரலாற்று தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 7வது முறையான வெற்றி என்பது பாஜகவுக்கு சாத்தியமாகி கொண்டிருக்கிறது.. அது, தபால் ஓட்டுக்களின் முன்னிலை பெறுவதிலும், அது நிரூபணமாகி கொண்டிருக்கிறது.
குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது.. பாஜகவின் கோட்டை என்ற பெயரை எளிதில் பெற்றுவிட்டது.. பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பதும் கூடுதல் காரணங்களாக இருக்கலாம்.
6 முறை குஜராத்தை ஆக்கிரமித்து கொண்ட பாஜகவுக்கு 7வது முறையும் ஆட்சி செய்ய ஆசை வந்துவிட்டது.. அதேசமயம், கடந்த காலங்களைவிட இந்த முறை நிறைய விமர்சனங்களையும், சவால்களையும், பாஜக சந்திக்க வேண்டியதாயிற்று.
இந்த விமர்சனங்கள்தான், காங்கிரஸ், ஆம் ஆத்மியின் லாபக்கணக்குகளாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு முந்திய கருத்து கணிப்பும்சரி, தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போலும்சரி, பாஜகவின் வெற்றியை பறைசாற்றும் விதமாகவே அமைந்து விட்டன.
குஜராத்தில் மாறிய களம்.. காங்கிரசுக்கு ஓவைசி கட்சி வேட்பாளர் ஆதரவு.. மனு வாபஸ்.. பாஜகவுக்கு ‛செக்’
ஃபர்ஸ்ட் பாயிண்ட்
இந்த தேர்தலிலும் வென்றால், 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை நெருங்கிவிடலாம் என்ற பாஜகவின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்றே தெரிகிறது. முதலாவதாக, இந்த தேர்தலை பொறுத்தவரை, மத்திய பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தொடர்ந்து பாதித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல். டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொது பிரச்னைகளை குஜராத் மாநில மக்கள் அதிகமாகவே சந்தித்து வரும் நிலையில், பாஜகவின் வாக்கு வங்கியை அது பாதிக்குமா? என்ற கேள்வி இயல்பாகவே எழ செய்தது.
அப்ளிகேஷன்
2வதாக, பாஜக ஆட்சியில் குஜராத் மக்களின் வாழ்க்கைதரமானது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.. குறிப்பாக, உழைக்கும் மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாகிவிட்டது.. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற நேரடி தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் போராட்டங்களை கையில் எடுக்கும் அளவுக்கு குஜராத்தில் நிலைமை சூழ்ந்ததை மறுக்க முடியாது. குஜராத்தில் 3.65 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர்.. அதேபோல, 3,400 கிராம பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு நடந்த தேர்விற்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.. குஜராத்தின் அபாய சூழலுக்கு இந்த 2 உதாரணங்களே போதுமானதாக இருக்கிறது.
ஃபேக்டரி
3வதாக, விவசாயிகளின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவேயில்லை.. கடந்த 2 வருடங்களாகவே பருவமழை இல்லாமல் பயிர்கள் சேதமடைந்துவிட்டன.. ஆனால், அவைகளுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்படவில்லை.. ஏற்கனவே, நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தி வருவதால் விவசாயிகள் கொதிப்பில் உள்ளனர்.. பழங்குடி மக்களும் பர்-தாபி- நர்மதா நதி இணைப்பு திட்டம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் உருக்கு ஃபேக்டரியை அமைப்பதற்கு எதிராக திரண்டுள்ளனர். ஆக, விவசாயிகள் என்றில்லாமல் தொழிலாளர்களும் சேர்ந்தே நசுக்கப்பட்டுள்ள சூழலும் குஜராத் பாஜகவில் எதிர்கொள்ள நேர்ந்தது.
சாதி அரசியல்
4வதாக, சாதி அரசியலை வழக்கம்போல் பாஜக இங்கும் கையில் எடுத்தது.. சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பை, குஜராத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.. காரணம், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள்தான், படிதார் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் அடங்குகிறார்கள்.. நீண்டகாலமாக தங்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இப்படியான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இன்னொன்றையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. இங்குள்ள சௌராஷ்டிரா பகுதி மக்களுக்கான இடஒதுக்கீடாகவும் இது பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த தீர்ப்பினால் பலனடைவது 15 சதவீத மக்கள் என்பதுடன், இந்த 15 சதவீத மக்கள்தான் வெற்றியை தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.. இது எல்லாவற்றையும்விட, இதே சமுதாயத்தை ஹர்திக் படேல், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வாக்கு அரசியலையும், நாம் கவனிக்க வேண்டி உள்ளது.
மெஜாரிட்டி எங்கே
5வதாக, இம்மாநிலத்தின் மொத்த தொகுதிகளில், 40 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும்.. இந்த 40லும் வெற்றி பெற்றால் ஆட்சியை எளிதாக கைப்பற்றி விடலாம். ஆனால் இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் குறித்த கவலை பாஜகவுக்கு பெரிதாக இல்லை என்றே சொல்லலாம். ஒரேயொரு இஸ்லாமிய வேட்பாளரைக்கூட களத்தில் நிற்கவைக்கவில்லை.. இதை காங்கிரஸ், ஆம் ஆத்மி இருவருமே சரியாக பயன்படுத்தி கொண்டாலும், பாஜகவை சிறுபான்மை ஓட்டுக்கள் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது... கடந்த 2002ம் ஆண்டு கலவரம் நடந்த கோத்ரா பகுதியிலும் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது... சுருக்கமாக சொல்லப்போனால், யாரை வேட்பாளராக முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்துதான், பாஜக களமிறங்கி உள்ளது. அந்தவகையில், சாதி அரசியல் இங்கும் வேலையை காட்டி உள்ளது.. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சீட் தந்ததில் இருந்தே இதற்கான உதாரணத்தை நம்மால் அறிய முடியும்.
6+5 பாயிண்ட்
6வதாக, இலவசங்களுக்கு எதிரானவர்களாக தங்களை பறைசாற்றி கொண்டிருந்தவர்கள், அதே தேர்தல் இலவச யுக்திக்குள் நுழையும் சூழலுக்கு பாஜகவும் தள்ளப்பட்டுவிட்டது.. ஏராளமான இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.. இந்த அறிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதற்கு முன்பு, சுப்ரீம்கோர்ட்டில், பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா சார்பில் 'இலவசங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், சொந்த கட்சியிலேயே இலவச வாக்குறுதிகளை தந்ததும், ஓட்டரசியலுக்கான யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஊருக்குதான் உபதேசம் என்பது, குஜராத் பாஜகவுக்கும் பொருந்திப்போன உண்மை.
B டீம்
7வதாக, முஸ்லிம் வாக்குகளை ஓவைசி பிரித்துவிடுவார் என்ற கணிப்பு எல்லா தேர்தல்களிலும் இருந்து வருகிறது.. பாஜகவின் பி-டீமாக ஓவைசி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் பரவலாகவும், வலுவாகவும் உள்ளன.. பாஜகவுக்கு எதிரான ஓட்டுக்கள், காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மிக்கு பிரிந்து போக சூழல் உள்ளது.. குஜராத்தில் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது என்று தெரிந்தும், ஓவைசி வேட்பாளர்களை இறக்கி உள்ளது ஏன்? என்ற கேள்விகளம் களத்தில் எழுகின்றன.. அந்தவகையில், எப்படி பார்த்தாலும், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பிரிப்பதன் மூலம் பாஜகவுக்கே இது சாதகமாக அமையும் என்றும் ஒரு கணிப்பு ஓடுகிறது.
புஸ்வாணம்
8வதாக, மோர்பி பால விபத்து பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் ஏன்றே கணிக்கப்பட்டது. 140 உயிர்களை காவு வாங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் இதைத் தங்களுக்கு சாதகமாக்கிய சூழலிலும், பெரிய தாக்கம் பாஜகவுக்கு ஏற்படுத்தவில்லை என்றே கருத்து கணிப்புகள் நிரூபித்துவிட்டு போயுள்ளன.. பராமரிப்பு நிறுவனம் எஃப்.சி வாங்காமலேயே பாலம் திறக்கப்பட்டது முதல், புனரமைத்ததில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதுவரை, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் புட்டு புட்டு குற்றஞ்சாட்டின.. ஆனாலும், இவர்கள் பற்ற வைத்த நெருப்பு, புஸ்வாணமாகிவிட்டதாகவே தெரிகிறது.
லீடிங் பாஜக
ஆக, எந்தவகையிலுமே குஜராத் மக்களின் தேவைகள் கடந்த காலங்களில் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் இன்னல்கள் தொடரும் சூழலும், ஆளும் பாஜகவே வெற்றியை சூட போகிறது என்றால், இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலே மக்களின் கண்ணை மறைத்துவிட்டதாகவே தெரிகிறது.. இதோ தபால் ஓட்டுக்களிலேயே, முன்னிலை பெற்று, குஜராத்தை தட்டி தூக்கி கொண்டிருக்கிறது பாஜக.. அந்தவகையில், பாஜகவை சாய்ப்பதற்கு, காங்கிரசும்சரி, ஆம் ஆத்மியும்சரி, நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தையே, இன்றைய தின ரிசல்ட் எடுத்து காட்டுகிறது!!