பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிரான வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
இது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க தடைகோரிய மனுவை இன்று மீண்டும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.
கருணாநிதி மீது நாங்க அளவுகடந்த அன்பு வச்சிருந்தோம்! அதனால் தான் இரவோடு இரவாக அதை செய்தோம் -அன்புமணி
கருணாநிதி பேனா
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்கு நடுவே மிகப்பெரிய பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்கு நடுவே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளித்து இருந்தார்.
பசுமை தீர்ப்பாயம் விசாரணை
நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதி ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும், எனவே கட்டுமானங்களை அனுமதிக்கக்கூடாது எனக் கோரி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு பசுமை தீர்பாயத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரரிடம் கேள்வி
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் குறிப்பாக இந்த பேனா சிலை தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதா என கேட்டனர். அதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை பெறப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பெறப்பட்டது என்று கூறினர். வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தனிடம் பசுமை தீர்ப்பாயம் நீதிபதிகள், நீங்கள் ஏன் கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
14ல் 2 துறைகள் தான்
மேலும், ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக தமிழாடு அரசு சார்பில் 14 துறைகளிடம் பதில் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், 14 துறைகளில் பொதுப்பணித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மட்டுமே பதில் விளக்கமளித்துள்ளனர். மீதமுள்ள 12 துறைகளின் சார்பில் இன்னும் பதிலளிக்கவில்லை. அதன் காரணமாக கால அவகாசம் கேட்டு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்.