செம.. குரூப்- 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை.. எக்ஸாமே எழுத முடியாது
சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்ட 99 தேர்வுகளை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
குரூப் 4 தேர்வு முறைகேடு: திடுக்கிடும் திருப்பம்.. தாசில்தார்கள் சிக்கினர்.. அழியும் மையால் அநியாயம்
சந்தேகம்
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இப்படி அவர்கள், சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது.
தாசில்தார்கள்
அதன்பின்னர், இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள், பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் விசாரணை வளையத்தின்கீழ் வந்துள்ளனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
99 பேர் முறைகேடு
இதுவரை 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி ஒரே விடையை தெரிவித்தனர். அதாவது அவர்கள் குடும்பத்தில் தாத்தா, அல்லது பாட்டி யாரோ இறந்துவிட்டதாகவும், எனவே ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு, அங்கேயே தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தனர். ஆனால் தீவிர விசாரணையில் இது பொய் என தெரியவந்தது. எனவே அடுத்தகட்டமாக விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் விரைவில் அழியும் மையை பயன்படுத்தி, முறைகேடு நடந்தது தெரியவந்தது.
39 தேர்வர்கள்
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்துள்ள விளக்கம் இதுதான்: சம்பந்தப்பட்ட 99 தேர்வுகளை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான 39 நபர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகள் நிகழா வண்ணம், தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.