TNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு
சென்னை: "வேனில் விடைத்தாள்களை வைக்க ரகசிய ரூம் இருந்தது.. சாலையோரம் ஹோட்டலில், டீக்கடைகளில் நாங்கள் வேனை நிறுத்தும்போதுதான் இந்த முறைகேடு நடந்தது.. இதற்கு உதவியாக ஜெயக்குமார் இருந்தார்" என்று குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.
அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புரோக்கர் பழனி மூலம்தான் எனக்கு முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் அறிமுகம் ஆனார்.. 2018-ல் இருந்து நல்ல பழக்கம்.
2019-ல் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானபோது, ஜெயக்குமார் என்னிடம் வந்து, சிலருக்கு குரூப்-4 தேர்வில் முறைகேடாக வெற்றி பெற உதவி செய்யணும், ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி தந்தார். 2 லட்சம் ரூபாயும் அட்வான்ஸ் தந்தார்.
மேஜிக் பேனா
கீழக்கரை, ராமேசுவரம் சென்டர்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லவும், அதற்கு நானும் சம்மதித்தேன். விடைத்தாள்களை வேனில் எடுத்து வரும்போதே திருத்திவிடுவது என முடிவு செய்தோம்.. தேர்வு எழுதும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீக்கிரமாகவே மை மறைந்துவிட கூடிய மேஜிக் பேனாக்களை ஜெயக்குமார் தந்தார். தேர்வும் முடிந்தது.
விடைத்தாள்கள்
விடைத்தாள்களை சென்னைக்கு வேனில் கொண்டு வரும் பணி என்னுடன் வேலை பார்க்கும் டிஎன்பிஎஸ்சி டைப்பிஸ்ட் மாணிக்கவேலிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு உதவி செய்வதற்காக என்னை நியமித்து இருந்தனர். நானும், மாணிக்கவேலும் ஜெயக்குமாரை முன்னதாகவே சந்தித்து, விடைத்தாளை எப்படி திருத்துவது என பிளான் பண்ணினோம்.
ராமநாதபுரம்
வேனில் ஏற்றி வரும்போது நடுவழியிலேயே வேண்டப்பட்டவர்களின் விடைத்தாள்களை எடுத்து திருத்தலாம் என்று முடிவு செய்தோம். கடந்த செப்டம்பர் 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து சென்னைக்கு இரவு 8 மணிக்கு ஏபிடிபார்சல் சர்வீஸ் வேனில் விடைத்தாள்கள் ஏற்றப்பட்டது. அந்த வேனில் ஒரு ஸ்பெஷல்ரூமில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டன. அந்த ரூமை பூட்டி நான்தான் சாவியை வைத்துக் கொண்டேன். நானும், மாணிக்கவேலும் வேனில் ஏறி கொள்ள, எங்களுக்கு பின்னாடியே ஜெயக்குமார் காரில் வந்தார்.
சிவகங்கை
இரவு 10 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் எழுதப்பட்ட தேர்வு விடைத்தாள்களையும் அதே வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்பினோம்.. சிவகங்கையை தாண்டி ரோட்டு ஓரமாக வேனை நிறுத்திவிட்டு, பாதுகாப்புக்கு வந்த போலீசார், மாணிக்கவேலை எதிரே இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பாட்டுக்கு அழைத்து சென்றேன். அவர்களை அங்கு சாப்பிட வைத்துவிட்டு நான் மட்டும் வேனுக்கு திரும்பி வந்து, காரில் இருந்த ஜெயக்குமாரிடம் சாவியை தந்தேன்.
டீக்கடை
வேனை திறந்து, ராமேசுவரம், கீழக்கரை மையங்களை சேர்ந்த எங்களுக்கு வேண்டிய 99 தேர்வர்களின் விடைத்தாள்களை மட்டும் எடுத்து காரில் வைத்து கொண்டார்.. நானும் சாவியை என்னிடம் வாங்கி வைத்து கொண்டு வேனில் கிளமைபினோம்.. விடிகாலை விக்கிரவாண்டியில் ஒரு டீக்கடையில் டீ சாப்பிடும் நேரத்தில், பின்னாடியே காரில் வந்த ஜெயக்குமாரிடம் திருத்தப்பட்ட 99 பேப்பர்களை வாங்கி ரகசிய அறையில் வைத்துவிட்டேன்.
ஜெயக்குமார் எங்கே?
பிறகு சென்னை வந்து விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி ஆபீசில் ஒப்படைத்தோம்" என்று பல பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் முக்கியமாக குறிப்பிடும் முகப்பேர் ஜெயக்குமாரைதான் இப்போது காணோமாம்... அவரை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.. குரூப் தேர்வு முறைகேட்டில் நித்தம் ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.