இனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்
சென்னை: இனி ஒரு வரி உயர்வு வந்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் வீதிக்கு வந்து போராடுவார்கள். அவர்களோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் போராடும். என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்ததாலும், இந்திய பொருளாதாரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்லும் நிலை உருவாகி உள்ளது.
பெரும் அதிர்ச்சி
வணிகம் நொடிந்துபோய் உள்ள தருணத்தில் மீண்டும் ஜி.எஸ்.டி. வரியில் சீரமைப்பு என்ற நோக்கத்தில் மத்திய அரசு மீண்டும் வரி உயர்வை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 சதவீதம்
வரி விதிப்பு என்பது 5 சதவீதம், 12 சதவீதம் என்ற 2 நிலைகளில் மட்டுமே இருக்க வேண்டும். வேளாண் விலை பொருட்களும், உணவக பண்டங்களுக்கும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும், வரி உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
வரி உயர்வு
இனி ஒரு வரி உயர்வு வந்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் வீதிக்கு வந்து போராடுவார்கள். அவர்களோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் போராடும்.
மத்திய அரசு
மத்திய - மாநில அரசுகள் மக்கள் மீதும் வணிகர்கள் மீதும் அதிக வரிச்சுமைகளை விதிப்பதை உடனடியாக கைவிட்டு, உரிய வரியை மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.