குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்
சென்னை: குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. கடந்த இரு நாட்களில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த இரண்டாவது திமுக எம்எல்ஏ இவராகும்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு, கடந்த மே மாதம் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் காத்தவராயன். சுமார் 30,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அவர் வென்றிருந்தார். திருமணமாகாதவர்.
2011ல் நகர்மன்ற தலைவராக பணியாற்றியவர். ஒன்றிய இளைஞரணி செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் படிப்படியாக திமுகவில் முன்னேறி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற தீவிர திராவிடவாதிதான் காத்தவராயன்.
இந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்பாக உடல்நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதய அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், 2 நாட்களுக்கு முன்பாக நாடித்துடிப்பு இறங்கி ஏறியதாம். எனவே அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், இன்று காத்தவராயன் மரணமடைந்தார்.
திருவெற்றியூர் திமுக எம்எல்ஏ, கே.பி.பி.சாமி நேற்று உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், அடுத்த நாளில் மற்றொரு திமுக எம்எல்ஏ இறந்துள்ளது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.