அதிதீவிர புயலாக மாறும் மாண்டஸ்! நிச்சயம் இதனை செய்யக் கூடாது! பொதுமக்களுக்கு தமிழக அரசின் வார்னிங்!
சென்னை : தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ள நிலையில் தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கபட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது.
தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெல்ல நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..இப்போ எங்கே இருக்கு தெரியுமா?
மாண்டஸ் புயல்
இதன் காரணமாக இன்று முதல் 11ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் எனவும் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தலைகாற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மழை பாதிப்பு வாய்ப்புள்ள மாவட்டங்களில் அரசு பேருந்து இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் கனமழையினை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளில் தயார் நிலை குறித்து உயர் அலுவலர் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின்னதாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது அதன்படி தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரடைப்பு படையின் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கனமழை எதிர் கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் வழங்கியுள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும். வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தொடர் கண்காணிப்பு
முன்னெச்சரிக்கை செய்திகள் 'டிஎன் ஸ்மார்ட்' செயலி மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்கும் போது காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள், வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல்துறை மண்டல குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
பல்வேறு அறிவுறுத்தல்கள்
மின்கம்பங்கள், மின்கடத்திகள் ஆகியவற்றினை இருப்பு வைத்திருப்பதோடு பாதிப்புக்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். மணல் மூட்டைகள் கம்பங்கள் அவசர காலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பாதுகாப்பான குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும் என் மன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதேபோல பொதுமக்களுக்கும் மாண்டஸ் புயல் தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் காய்கறி பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். கடற்கரைக்குச் செல்வதை தவிர்ப்பதோடு பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ்நிற்பதை தவிர்க்க வேண்டும்.
செல்பி எடுக்கக் கூடாது
நீர் நிலைகளின் அருகிலேயும் பலத்த காற்று வீசும் போதும் திறந்த வெளிகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மெழுகுவர்த்தி தீப்பெட்டி மின்கலன்கள் உலர்ந்த உணவு வகைகள் குடிநீர் மருந்துகள் உள்ளிட்டவற்றை அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகளும் பொதுமக்களுக்காக தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.