தபால் மூலம் வாக்களிக்க யோசிச்சு இருங்கீகளா? அப்போ முதல்ல இதை படிங்க
சென்னை: சென்னையில் தாபல் வாக்கு மூலம் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் வரும் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதேபோல வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 80 வயதைக் கடந்த முதியவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் வாக்குகளை யாரெல்லாம் அளிக்கலாம், எப்போது அனுப்ப வேண்டும் என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகள்
இது தொடர்பாகச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 முதல் 16 வரை
இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியின் மூலம் படிவம் 12D-ஐ சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று பூர்த்தி செய்து மார்ச் 12 முதல் மார்ச் 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்
80 வயதைக் கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகள், கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாகச் சந்தேகப்படும் வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் அதற்கு உரிய அரசு சான்றிதழை வழங்க வேண்டும். அதேபோல கொரோனா நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் சுகாதார அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை வழங்க வேண்டும்.
என்ன நடைமுறை
12D-ஐ படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மட்டுமே வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்றும் அதற்கான ஒப்புதலைப் பெற்றுத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. வாக்குச்சாவடி நிலை அலுவலர் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்குச் செல்லும்போது அங்கு அவர் இல்லை என்றால் ஐந்து தினங்களில் மீண்டும் இருமுறை படிவங்கள் பெற முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பமில்லை எனில் வழக்கம்போல நேரில் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்கு செலுத்தலாம்